-->

27 நட்சத்திரங்களும், அதற்குரிய வழிபாட்டு தலங்களும்


27 நட்சத்திரங்களும், கோயில்களும்

ஜோதிடத்தில் 9 கோள்களும் 27 நட்சத்திரங்கள் உண்டு என்பது நாம் அறிந்ததே. 9 கோள்களுக்கும் தனித்தனியாக கோயில்கள் உண்டு. இவை நவகிரக கோயில்கள் என்று அழைக்கபடுகின்றன. அதே போல ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு கோயில் உண்டு. இது பலபேருக்கு தெரிவதில்லை. அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய கோயிளுக்கு சென்று தரிசனம் செய்தால் நல்வாழ்வை பெறலாம். இதன்படி அடிப்படையில் 27 நட்சத்திரத்திற்கும் உரிய கோயில்கள் பின்வருமாறு,



அஸ்வினி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம் பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் திருவாரூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருத்துறைப்பூண்டிக்கு அருகில் மேலும் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.


பரணி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், அக்னீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் நல்லாடை என்ற ஊரில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

கார்த்திகை : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோவில், காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோவில். இந்த கோவில் மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தூரத்தில் கஞ்சா நகரம் என்ற இடம் உள்ளது. இதன் மெயின் ரோட்டில் இருந்து பிரியும் சாலையில் அரை கிலோமீட்டர் தூரம் சென்றால் கோவிலை அடையலாம்.

ரோகிணி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோவில் பாண்டவதூதப் பெருமாள் திருக்கோவில். இந்த ஆலயம் காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள சாலையில் அமைந்துள்ளது.

மிருகஷீரிஷம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஆதிநாராயணப் பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 50 கிலோமீட்டர் தூரத்தில் முகூந்தனூர் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது.

திருவாதிரை : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபடவேண்டிய ஆலயம் அபய வரதீஸ்வரர். இந்த ஆலயம் அதிராம்பட்டினம் என்ற ஊரில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பட்டுக்கோட்டைக்குச் சென்று, அங்கிருந்து 12 கிலோமீட்டர் சென்றால் இந்த ஊரை அடையலாம்.



புனர்பூசம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோவில் அதிதீஸ்வரர் திருக்கோவில். இந்தக் கோவில் பழைய வாணியம்பாடியில் அமைந்துள்ளது. வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் 67 கிலோமீட்டர் தொலைவில் வாணியம்பாடி உள்ளது. அங்கிருந்து 3 கிலோமீட்டரில் பழைய வாணியம்பாடி உள்ளது.

பூசம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோவில், அட்சய புரீஸ்வரர் திருக்கோவில். பட்டுக்கோட்டையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கிலோமீட்டர் தூரத்தில் விளங்குளம் என்ற ஊர் வரும். அங்கிருந்து தெற்கே 2 கிலோ மீட்டர் சென்றால் இந்த கோவில் வரும். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளம் செல்லலாம்.

ஆயில்யம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், கடற்கடேஸ்வரர் ஆலயம். கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் சாலையில் 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவிசநல்லூர் என்னும் ஊர். இங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் திருந்துதேவன்குடி என்ற ஊரில் இந்த கோவில் உள்ளது.

மகம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில். திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தூரத்தில் விராலிப்பட்டி விளக்கு உள்ளது. இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் இந்த கோவில் உள்ளது.

பூரம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் திருவரங்குளம் என்ற ஊரில் உள்ளது. புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கிலோமீட்டர் தொலைவில் திருவரங்குளம் உள்ளது.



உத்திரம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், மாங்கல்யேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் இடையாற்று மங்கலம் என்ற ஊரில் உள்ளது. திருச்சி சத்திரம் பஸ்நிலையத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லால்குடி சென்று, அங்கிருந்து 5 கிலோமீட்டர் சென்றால் இந்த ஆலயத்தை சென்றடையலாம்.

அஸ்தம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டியது, கிருபா கூபாரேச்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் கோமல் என்ற ஊரில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் இருக்கிறது குத்தாலம் என்னும் ஊர் உள்ளது. இங்கிருந்து 8 கிலோமீட்டர் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம்.

சித்திரை : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோவில், சித்திர ரத வல்லபபெருமாள் திருக்கோவில். மதுரையில் இருந்து 23 கிலோமீட்டர் தூரத்தில் குருவித்துறை என்னும் ஊர் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் இந்த கோவில் உள்ளது.

சுவாதி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோவில் தாத்திரீஸ்வரர் திருக்கோயில். இந்த ஆலயம் சித்துக்காடு என்ற ஊரில் உள்ளது. சென்னை - பூந்தமல்லி சாலையில் தண்டுரை என்ற ஊரில் இருந்து, 8 கிலோமீட்டர் தொலைவில் இந்த சித்துக்காடு உள்ளது.

விசாகம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம். முத்துக்குமாரசாமி திருக்கோயில். இந்த ஆலயம் திருமலைக் கோவிலில் உள்ளது. மதுரையில் இருந்து செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயத்தை அடையலாம்.

அனுஷம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோவில், மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் திருநின்றியூர் என்ற ஊரில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது.

கேட்டை : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம் வரதராஜப் பெருமாள் திருக்கோவில். தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 13 கிலோ மீட்டர் தூரத்தில் பசுபதிகோயில் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

மூலம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டியது, சிங்கீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயம் மப்பேடு என்ற ஊரில் உள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கிலோமீட்டர் தூரத்தில் இந்தத் கோவில் உள்ளது. பூந்தமல்லியில் இருந்து பேரம்பாக்கம் செல்லும் சாலையில் 22 கிலோமீட்டரில் மப்பேடு உள்ளது.



பூராடம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், ஆகாசபுரீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் கடுவெளி என்ற இடத்தில் இருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கடுவெளி.

உத்திராடம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் பூங்குடி என்ற திருத்தலத்தில் உள்ளது. சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் 12 கிலோமீட்டர் தூரத்தில் ஓக்கூர் உள்ளது. இங்கிருந்து 3 கிலோமீட்டர் சென்றால் பூங்குடி தலத்தை அடையலாம்.

திருவோணம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும். திருப்பாற்கடல் என்ற இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. வேலூரில் இருந்து சென்னை செல்லும் சாலையில் 20 கிலோமீட்டர் தூரத்தில் காவேரிப்பாக்கம் உள்ளது. இங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவு சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம். 

அவிட்டம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், பிரம்மஞானபுரீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் கொருக்கை என்ற இடத்தில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பேருந்து வழியாக இங்கு செல்லலாம்.

சதயம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், அக்னிபுரீஸ்வரர் ஆலயம். இது திருப்புகலூர் என்ற ஊரில் உள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஆலயம் உள்ளது.

பூரட்டாதி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், திருவானேஷ்வர் திருக்கோயில். இந்த ஆலயம் ரங்கநாதபுரம் என்ற ஊரில் உள்ளது. திருவையாறில் இருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி வழியாக அகரப்பேட்டை செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தூரத்தில் இந்த கோவில்.

உத்திரட்டாதி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டியது, சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் தீயத்தூர் என்ற இடத்தில் இருக்கிறது. புதுக்கோட்டையில் இருந்து ஆவுடையார் கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவன வாசல் செல்லும் சாலையில் தீயத்தூர் உள்ளது.

ரேவதி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், கயிலாயநாதர் ஆலயமாகும். திருச்சியிலிருந்து முசிறி சென்று, அங்கிருந்து தாத்தய்யங்கார் பேட்டை செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள காருகுடி என்னும் இடத்தில் இந்த ஆலயம் உள்ளது.


அவரவர் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கேற்ப மேற்கண்ட கோவிலில் பூஜை செய்து கொண்டால் மேலும் நன்மைகளும், வளமும், நலமும் பெறலாம்.

Previous Post Next Post