-->

திருவாதிரை விரதமிருந்தால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?


திருவாதிரை விரதத்தின் நன்மைகள் 

திருவாதிரை என்பது மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கப்படும் வழிபாடாகும். மார்கழி மாதம் என்பது வழிபாட்டுக்குரிய மாதமாகும். தக்ஷிணாயனத்தின் கடைசி மாதமாகும்.

தேவர்களுக்கு இது அதிகாலைப் பொழுதாகும். இந்த காலம் பிரம்மமுகூர்த்தம் என அழைக்கப்படும். இவ்வேளையில் தில்லையில் குடிகொண்டு அருள்புரியும் எம்பெருமான் நடராஜனைக் காண தேவர்கள் அனைவரும் கூடுவதாக ஐதீகம்.
மோட்சம் கொடுக்கும் திருவாதிரை விரதம்

இந்நாளிலேயே இறைவன் நடராஜப்பெருமான் பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாத முனிவருக்கும் காட்சி தந்து நடனம் ஆடிக் காண்பித்தார். அது மட்டுமின்றி இதே நாளில் தான்மாணிக்கவாசகரின் திருவெம்பாவை நிறைவுற்று அவர் ஈசனை தரிசித்தார். இதே நாளில் தான் ஈசன் தேவலோகப் பசுவான காமதேனுவுக்கும் தரிசனம் தந்து அருள்புரிந்ததாக ஐதீகம்.

பார்வதி தேவி சிவபெருமானை நினைத்து தவம் செய்ததை எண்ணி மகிழ்ந்து பார்வதி தேவியை மணக்க சம்மதம் கூறியதும் இம்மாதம் தான்.
அந்த பார்வதி தேவியை போலவே நமக்கும் நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று கன்னிப்பெண்கள் இந்த விரதத்தினை  கடைபிடிக்கின்றனர்.

திருவாதிரை களியின் மகத்துவம்


 ‘திருவாதிரைக்கு ஒருவாய்க்களி' என்பது பழமொழி. எனவேதான் மார்கழி திருவாதிரை அன்று விரதம் உள்ள பக்தர்கள் களி செய்து எம்பெருமானுக்கு படைத்து ஒரு வாய்களி உண்டு மகிழ்கின்றனர்.

சிதம்பரத்திற்கு அருகே உள்ள ஒரு ஊரில் சேந்தனார் என்றொரு விறகுவெட்டி வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பின் தான் உண்டு உணவருந்துவார்.

ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் அனைத்தும் ஈரமாகிவிட்டது. அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை. எனவே அன்று கேழ்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார்.
ஆனால் அன்றைய தினம் பார்த்து ஒரு சிவனடியார் கூட வரவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பி, நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லதிற்கு வந்தார்.

சேந்தனார் மனமகிழ்ந்து  களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் மீதமுள்ள களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.

மறுநாள் காலையில் வழக்கம் போல் தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயில் கருவறையைத் திறந்தனர். அங்கே  நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள் காணப்பட்டன.

பக்தருக்காக மனமிரங்கி அந்த பெருமானே அடியாராக வந்து சேந்தனாருக்கு காட்சி அளித்தார். அதனால் தான்   ‘திருவாதிரைக்கு ஒருவாய்க்களி' என்று பழமொழி வந்தது.

திருவாதிரை விரதம் இருக்கும் முறை

மார்கழி திருவாதிரை நாளில், அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நீராடி, சிவநாமம் ஜெபித்து திருநீறு பூச வேண்டும்.

சிவாலயம் சென்று நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசிக்க வேண்டும். காலையில் நடக்கும் தாண்டவ தீபாராதனையைக் காண வேண்டும்.

சுவாமிக்கு களி படைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். அன்று பகலில் சாப்பிடக்கூடாது. சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும்.

இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதம் முடிக்கலாம்.

திருவாதிரை அன்று விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால் வாழ்வுக்குப் பின் கயிலாயத்தில் வாழும் பேறு பெறலாம் என்பது நம்பிக்கை.
Previous Post Next Post