-->

காராமணியின் மருத்துவ பயன்கள்


தட்டைபயிறு, காராமணி

காராமணி என்பது பயறு வகைகளில் ஒன்று. இதனைத் தட்டைப்பயறு, தட்டாம்பயறு என்று கூறுவர். இது கருப்பு நிறத்திலும், செந்நிறத்திலும் இருக்கும்.

இது வறண்ட நிலத்திலும் செழித்து வளரும். ஏழை மக்களின் பசியைப் போக்கி அவர்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குவதால் காராமணி ‘ஏழைகளின் அமிர்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

தட்டைபயிறு நன்மைகள்


இந்த பயிரினை தனியே வேகவைத்தும் சாப்பிடலாம். குழம்பு, பொரியல், அவியல் துவையல் போன்று செய்தும் சாப்பிடலாம். ஊறவைத்து அரைத்துப் பலகாரமும் சுடுவர்கள்
.
காராமணியை வாங்கும்போது ஒரே சீரான நிறத்துடன் துளைகள் இல்லாத உடையாத பயறுகளைத் வாங்க வேண்டும். காராமணியானது சூப்புகள், சாலட்டுகள், கேக்குகள், இனிப்புகள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

தட்டைபயிறு, காராமணியின் வரலாறு

சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னரே இப்பயறு ஆப்பிரிக்காவில் முதலில் பயிரிடப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிமு 200 முதல் கிமு 300 ஆண்டிற்கு இடையில் இந்தியாவிலும் இது பயிரிடபட்டது.
தற்போது தெற்காசியா, ஆப்பிரிக்கா, தென்அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகிய இடங்களில் இது அதிகளவு பயிர் செய்யப்படுகிறது.

காராமணியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

காராமணியில் கால்சியம், இரும்புச்சத்து, செம்புச்சத்து, மாங்கனீசு, பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகியவை அதிகளவும், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம் ஆகியவையும் உள்ளன. பயோசனின் என்ற பைட்டோ நியூட்ரியன் காணப்படுகிறது. மேலும் இதில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவையும் அதிகமாக உள்ளன.

மேலும் இதில் விட்டமின் பி1 (தயாமின்), பி9 (ஃபோலேட்டுகள்), பி5 (பான்டாதெனிக் அமிலம்), பி6 (பைரிடாக்ஸின்), பி3(நியாசின்), பி2 (ரிபோஃப்ளோவின்), ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளன.

காராமணி மருத்துவப் பயன்கள்

ஜீரண சக்தி அதிகரிக்கும்

காராமணியானது நார்ச்சத்தினை அதிகம் கொண்டுள்ளது. எனவே ஜீரண சக்தியை அதிகப்படுத்துவதுடன் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சினைகளும் ஏற்படாமல் தடுக்கிறது.

நச்சுகளை நீக்கும்

காராமணியில் உள்ள ஆன்டிஆக்ஸிடேன்டுகள் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகின்றன. மேலும் இவை ப்ரீரேடிக்கல்களின் செயல்பாடுகளைத் தடைசெய்கின்றன. இதனால் செல்களின் பாதிப்படைவது தடுக்கப்பட்டு புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் இதில் இருக்கும் ‘விட்டமின் சி’ உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

நல்ல தூக்கத்தை கொடுக்கும்

காராமணியில் மெக்னீசியம் மற்றும் டிரிப்தோபன் என்னும் சத்து உள்ளது. இது உடலின் சோர்வினைப் போக்கி நல்ல தூக்கம் ஏற்பட வழிவகை செய்கிறது. தூக்க வராமல் தவிப்பவர்கள் தூங்கச் செல்வதற்கு முன்பு காராமணியை சாப்பிட்டுவிட்டு படுத்தால் நல்ல தூக்கத்தினைப் பெறலாம்.

இதயத்தை பாதுகாக்கும்

காராமணியில் காணப்படும் விட்டமின் பி1 (தயாமின்) இதய நலத்திற்கு பெரிதும் உதவுகிறது. இந்த விட்டமின் இதய செயலிழப்பு போன்ற பிரச்சனைகளிலிருந்து நம்மை காக்கிறது. மேலும் காராமணியில் காணப்படும் பிளவனாய்டுகள் இதயம் நன்றாகச் செயல்பட உதவுகின்றன. இதில் உள்ள நார்ச்சத்தானது உடலில் கொலஸ்ட்ரால் சேருவதைத் தடைசெய்வதோடு தமனிகளில் அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.

காராமணி பயன்கள்


எடையை குறைக்கலாம்

காராமணியானது குறைந்த கொழுப்பை கொண்டுள்ளது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்தானது நல்ல செரிமானத்தைத் தூண்டுவதுடன் அதிக பசி ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் காராமணியை தொடர்ந்து எடுத்து கொள்ள வேண்டும்.

ரத்த சோகையை தடுக்கும்

உடலில் இரத்த சிவப்பணுக்களின் குறைபாட்டால் இரத்த சோகை நோய் ஏற்படும். காராமணியில் உள்ள இரும்புச் சத்தானது இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது.

சருமம் பாதுகாக்கபடும்

காராமணியில் உள்ள ஆன்டிஆக்ஸிடேன்டுகள், விட்டமின் சி, புரதம் ஆகியவை சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகின்றன. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடேன்டுகள் சருமம் முதிர்ச்சி அடைவதை தடை செய்து வயதான தோற்றம் ஏற்படாமல் சருமத்தை பாதுகாக்கிறது.

எலும்புகளைப் பாதுகாக்கும்

காராமணியில் உள்ள கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு போன்றவை எலும்புகளின் பாதுகாப்பில் உதவுகிறது. எனவே இதனை உண்டு எலும்புகளைப் பாதுகாக்கலாம்.

சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்

காராமணியில் காணப்படும் மெக்னீசியமானது இன்சுலின் சுரப்பினை சீராக்கும். இதனால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். மேலும் இது உடல்சோர்வினை நீக்கி நல்ல தூக்கத்திற்கும் வழிவகை செய்கிறது.
Previous Post Next Post