-->

பாரம்பரிய நெல் ரகங்கள், அரிசி வகைகள் மற்றும் பயன்கள்


நெல்

உலகில் பெரும்பாலான மக்கள் தினமும் சாப்பிடும் உணவான அரிசி நெற்பயிரிலிருந்தே கிடைக்கிறது. உலகில் அதிகம் உண்ணப்படும் தானியம் அரிசியே ஆகும். மேலும் உலகிலேயே, சோளத்திற்கும், கோதுமைக்கும் அடுத்தபடியாக அதிகம் பயிரிடப்படுவது நெல்லே ஆகும்.

நெல் வகைகள்


நெற்பயிர் சுமார் ஐந்து மாதங்கள் வரை வளரக் கூடியதாகும். இப்பயிரின் மேலுறை உமி என அழைக்கப்படும். மேலுறை நீக்கப்பட்ட பின் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு மேலுறை நீக்கப்பட்ட விதையே அரிசியாகும்.

நெல்லின் வரலாறு

நெல் புல் வகையை சேர்ந்த ஒரு தாவரமாகும். இது தென்கிழக்கு ஆசியாவில் தோன்றியது. இது ஈரபாங்கான நிலங்களில் வளரக்கூடியது. எல்லா வகை நெல் இனங்களின் பொதுவான முன்னோடி காட்டு நெல் இனமாகும். பின்பு உலகில் ஆசிய நெல், ஆப்பிரிக்க நெல் என இரு வகை நெற்பயிர்கள் பயிரிடப்பட்டன.

ஆசியாவில் நெல் சாகுபடி கி.மு 4500க்கு முன்பாகவே பல நாடுகளில் பயிரிடப்படுள்ளது. ஆசிய நெல் இமயமலை அடிவாரத்தில் தோன்றியதாகக் கருதப்படுகிறது.

நெல் அல்லது அரிசி ரகங்கள்

மக்களை பொருத்தவரை நெல் இரகங்கள் அரிசியின் வடிவத்தாலும், குணத்தினாலும் வகைப்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் நீளமான, மணமுடைய 'பாஸ்மதி' அரிசி, நீளமான, சன்னமான 'பாட்னா' அரிசி, குட்டையான 'மசூரி' அரிசி ஆகிய இரகங்கள் பயிரிடப்படுகின்றன. தென்னிந்தியாவில், நீளமான சன்ன இரக 'பொன்னி' அரிசி பிரபலமானது.

புழுங்கல் அரிசி

தென் மற்றும் கிழக்கு இந்தியாவில் நெல் அறுவடைக்குப்பின் நீரில் வேகவைத்து, உலர்த்தி, பின்பு ஆலையில் அரைத்து அரிசியாக்கப்படுகிறது. இவ்வகை அரிசி 'புழுங்கல்' அரிசி என்று அழைக்கப்படுகிறது. இதற்க்கு கடினமான நெல் இரகங்களே தேர்வு செய்யபடுகின்றன. புழுங்கல் அரிசி ஆலையில் தீட்டப்படும்போது, பல சத்துக்களை இழப்பதில்லை, இது எளிதில் செரிமாணம் ஆகக்கூடியது.

பாரம்பரிய நெல் ரகங்கள்


பச்சரிசி

அறுவடைக்குப்பின் நெல்லை, வேக வைக்காமல், நேரடியாக ஆலையில் அரைக்கும் போது கிடைக்கும் அரிசி பச்சரிசி என்று அழைக்கபடுகிறது. செரிமான பிரச்சனை காரணமாக பலர் இவ்வகை அரிசியை சாப்பிடுவதில்லை.

மல்லிகை அரிசி

தாய்லாந்தில் விளைவிக்கப்படும் 'மல்லிகை' அரிசி நீள அரிசி வகையாகும். இவ்வகையான நீளமான அரிசியில் ‘அமைலோபெக்டின்’ குறைவாக இருப்பதால், வேகவைக்கப்படும்போது, ஒட்டும் தன்மை குறைவாக இருக்கும். சீனாவிலும், ஜப்பானிலும் பெரும்பாலும், குட்டையான ஒட்டும் தன்மை அதிகமுள்ள அரிசி இரகங்களே பயன்படுத்தப்படுகின்றன.

மணமுடைய அரிசி

மணமுடைய அரிசி இரகங்கள் இயற்கையாகவே மணம் கொண்டவை. இந்திய இரகங்களான 'பாஸ்மதி', 'பாட்னா' ஆகிய இரகங்கள் உலக பிரசித்தி பெற்றவை.


பாரம்பரிய நெல் வகைகள்

இந்தியாவில் முன்பு 2,00,000 அதிகமான நெல் வகைகள் முன்பு வழக்கத்தில் இருந்துள்ளதாக அறியப்படுகிறது.

தமிழக பாரம்பரிய நெல் வகைகள்

சிவப்புக் குடவாழை, வெள்ளையான், பனங்காட்டுக் குடவாழை, ஒசுவக்குத்தாலை, குருவிகார், கல்லுருண்டை, சிவப்புக் கவுனி, கருடன் சம்பா, வரப்புக் குடைஞ்சான், குழியடிச்சம்பா, நவரா, காட்டுயானம், சிறுமணி, கரிமுண்டு, ஒட்டடையான், சூரக்குறுவை, வாடன் சம்பா, முடுவு முழுங்கி, களர் சம்பா, குள்ள்க்கார், நவரை, குழிவெடிச்சான், கார், அன்னமழகி, இலுப்பைப்பூ சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, கருங்குறுவை, கல்லுண்டை, சீரக சம்பா, வாசனை சீரக சம்பா, விஷ்ணுபோகம், கைவரை சம்பா, அறுபதாம் குறுவை, பூங்கார், காட்டு யானம், தேங்காய்ப்பூ சம்பா, கிச்சடி சம்பா, நெய் கிச்சி, பூங்கார், கருத்தகார், சீதாபோகம், மணக்கத்தை போன்றவை ஒரு சில நம் பாரம்பரிய நெல் ரகங்களாகும்.


பாரம்பரிய நெல்லின் பயன்கள்

பூங்கார்

இந்த நெல் அரிசியை கர்பிணிப் பெண்களுக்குப் பத்தியக் கஞ்சியாக செய்து கொடுத்தால் சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும். உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது.

சிவப்பு கவுணி

இந்த நெல் அரிசி இதயத்தை பலப்படுத்தும், ஈறுகளை பலப்படுத்தும், இரத்த ஓட்டத்தை சமன்படுத்தும், மூட்டு வலியை குணமாக்கும்.

கருங்குறுவை

இந்த நெல் வகை ரண குஷ்டத்தையும், உடலில் உள்ள சிற்சில விஷத்தையும் முறிக்கும். போக சக்தியை தரும், மேலும் இது ‘இந்தியன் வயாகரா’ என்றும் அழைக்கப்படுகிறது.

கருத்தக்கார்

இந்த நெல் வகை வெண்குஷ்டத்தை போக்கும், காடி தயாரிப்பதற்கு பயன்படுகிறது. பாதரசத்தை முறித்து மருந்து செய்வதற்கு பயன்படுகிறது.

பாரம்பரிய அரிசி வகைகள்

குடவாழை

குடலை வாழ வைப்பதால் இதற்க்கு இப்பெயர் வந்தது. சர்க்கரை நோய் வராமல் தடுக்கும், அஜீரண கோளாறை சரி செய்யும்.

சீதாபோகம்

இந்த அரிசி உடல் பலம், தேக பளபளப்பு, விந்து விருத்தி உண்டாக்கும். மேலும் அஜீரணத்தை குறைக்கும்.

மணக்கத்தை

இது தோலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் போக்கும். மேலும் புண்கள், ரணங்கள் ஆகியவற்றை குறைக்கும்.

காட்டுயானம்

இந்த வகை நெல்லில் ஆன்டி ஆக்ஸிடென்ட் அபிரிதமாக இருப்பதால் இதய சம்பந்தமான வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும். மேலும் டைப்-2 சர்க்கரை வியாதி நோயாளிகளுக்கு உகந்தது.

அன்னமழகி

இந்த அன்னமழகி நெல் இனிப்பு சுவை கொண்டது. அன்னமழகி அரிசி சகல சுரங்களையும், பித்த வெடிப்பையும் போக்கும். உடலுக்கு சுகத்தை கொடுக்கும்.

இலுப்பைப்பூ சம்பா

இது பித்தத்தினால் விளையும் சிற்சில ரோகம், சிரஸ்தாபம், உபசர்க்கதாகம், உஷ்ணம் ஆகியவற்றை சரி செய்யும்.

கல்லுண்டைச் சம்பா

இந்த அரிசியை சாப்பிடுபவர்களுக்கு மல்யுத்த வீரரும் எதிர்க்க இயலாத தோள் வலிமையை தரும்.

காடை சம்பா

இந்த அரிசி பிரமேக சுரமும், குறிப்பிட்ட நோய்களையும் நீக்கும். விந்து விருத்தியும், அதிக பலமும் உண்டாகும்.

காளான் சம்பா

இது உடலுக்கு மலை போன்ற உறுதியையும், சுகத்தையும் தரும். சில வாத ரோகத்தையும் குறைக்கும்.

குண்டு சம்பா

இதை உணவில் சேர்த்துக் கொண்டால் நாவறட்சியைத் தீர்க்கும். ஆனால் இந்த வகை அரிசி கரப்பான் பினியை உண்டாக்கக் கூடும். பசியை மந்திக்கச் செய்யும்.

குன்றுமணி சம்பா

இது வாதக் குறைபாடுகளை நீக்கும். விந்தைப் பெருக்கும். உடல் வன்மையைப் பெருக்கும்.

கிச்சிலி சம்பா

இந்த நெல் ரகம் உடலுக்கு பலம், உற்சாகம், உடல் பளபளப்பு ஆகியவற்றை உண்டாக்கும். தேறாத உடல் தேறும்.

குறுஞ் சம்பா

இது பித்தம், கரப்பான் நீங்க விந்து விருத்தியை உண்டாக்கும். வாத நோயை நீக்கும்.

புழுகு சம்பா

இந்த அரிசியை சாப்பிட்டால் உடலுக்கு வனப்பும், அமைதியும், பசியையும், பலமும் உண்டாக்கும்.

கைவரை சம்பா

இது உடலுக்கு அதிக வலிமையும், சுகமும் உண்டாக்கும். இந்த அரிசியை உண்டால் உடலில் சிறிது பித்தமும் அதிகரிக்கும்.

வளைத்தடிச் சம்பா

இந்த நெல் வகை வாத, பித்த தொந்தரவு, வயிற்று உப்புசம், வயிற்று இரைச்சல், கரப்பான் ஆகியவற்றை தடுக்கும்.

மாப்பிள்ளைச் சம்பா

இந்த நெல் நேரடி விதைப்பிற்கு ஏற்றது, சத்துள்ள இந்த நெல்லை சாப்பிட்டால் உடல் வலுவடையும். நரம்புகளை வலுப்படுத்தும், ஆண்மை தன்மை அதிகரிக்கும்.

மணிச்சம்பா

இந்த வகை நெல் அரிசி அளவுக்கு அதிகமாக சிறுநீரை குறைக்கும். குழந்தை, முதியவர்களுக்கு அதிக சுகத்தை உண்டாக்கும்.

மல்லிகை சம்பா

இந்த அரிசி மிகவும் ருசியானது. தேகத்திற்கு சுகத்தையும், உறுதியையும் தரும். கரப்பான், பிரமோகம், உடல் வெப்பம் ஆகியவற்றை போக்கும்.

மிளகு சம்பா

இது உடலுக்கு சுகத்தை தரும், பசியை உண்டாக்கும், வாதம் போன்ற பல விதமான ரோகத்தை போக்கும்.

மைச்சம்பா

இந்த நெல் வாதம், பித்தம் போன்ற கோளாறுகளை குறைக்கும். வாத கோபம், வாந்தி போன்றவற்றை போக்கும்.

வாலான் அரிசி

இந்த நெல் மந்தம், தளர்ச்சி முதலியவை குறையும். உடலுக்கு அழகும், போஷக்கையும் உண்டாக்கும்.

மூங்கில் அரிசி

மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்கும். இந்த பூவிலிருந்து வரும் காய்கள் தான் நெல், அதாவது மூங்கில் நெல். மூங்கிலிருந்து பெறப்படும் மூங்கிலரிசியைச் சமைத்து உண்டு வர, உடல் திடம் உண்டாகும், உடல் இறுகும், கொடிய நோய்களெல்லாம் நெடுந்தூரம் ஓடும்.

சண்டிகார்

இந்த நெல் தீராத நோய்களை தீர்க்க வல்லது, உடல் வலிமையை கொடுக்கும், உடலை முறுக்கேற்றும், நரம்புகளை பலப்படுத்தும், மற்றும் பல்வேறு வகையான மருத்துவ குணங்களை கொண்டது.

கார் அரிசி

இந்த நெல் உணவை நமது உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நன்கு உறுதியடையும். உடல் தசைகள் நல்ல முறையில் வளர்ச்சி பெறும். உடலின் தோற்றத்திலும் கவர்ச்சி தோன்றும். சருமம் மென்மையாகவும் பட்டுப் போலவும் இருக்கும்.

சீரகச் அரிசி

இந்த நெல் சிறுவாத நோய்களைக் குணமாக்கும், இனிப்பு சுவை கொண்டது.

Previous Post Next Post