-->

கோடை வெயிலில் இருந்து உடலை பாதுகாக்க உதவும் நுங்கு



நுங்கு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் 

மனிதன் மறந்து வரும் நம் பழைமையான பாரம்பரியங்களில் பனை மரமும் ஒன்று. பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரமாகும். பனைமரம் தரும் நன்மைகள் ஏராளம்.

நுங்கு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

வெயில் காலத்தில் இருந்து நம்மை பாதுகாக்க, இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம் தான் பனைமரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு. கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு என்றால் அது மிகையல்ல. பனைமரத்தில் இருந்து பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களும் மருத்துவ குணம் வாய்ந்தவை.

நுங்கில் வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம், புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. 

நுங்குக்கு நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை உண்டு. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உணவு கட்டுப்பாட்டுடன், நுங்கை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். நுங்கில் உள்ள நீரானது பசியை தூண்டும். மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கு நுங்கு அருமருந்தாகும்.

சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக, அதிக தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அப்படியானவர்கள் நுங்கை சாப்பிட்டால் தாகம் அடங்கிவிடும். 

ரத்தச்சோகை உள்ளவர்கள் தொடர்ந்து நுங்கை சாப்பிட்டு வந்தால், விரைவில் குணமாகி உடல் சுறுசுறுப்பாகும். நுங்கில் ஆந்த்யூசைன் என்னும் ரசாயனம் இருப்பதால், பெண்களுக்கு பிரஸ்ட் கேன்சர் என்று அழைக்கப்படும் மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும். 

வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது நுங்கு. அதேபோல் பதநீரும் நம் ஊர் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற, மிகச் சிறந்த இயற்கை பானம். உடல் உஷ்ணத்தை உடனே தணித்து உடலைக் குளிரவைக்கும் தன்மை கொண்டது.

வெயில் காலத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளில் இருந்தும், நம் உடலை பாதுகாக்கும் சத்துக்கள் இதில் அதிகம். பேன் தொல்லை இருப்பவர்கள், பதநீரைத் தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.

நுங்கை இளநீருடன் ஜூஸ் போல அருந்தலாம். சருமமும் உடலும் பொலிவடையும். பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டியுடன், சுக்கு சேர்த்துச் சாப்பிட்டால், நன்றாக பசி எடுக்கும்.

சுக்கு, மிளகு, கருப்பட்டி சேர்த்து, குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் தாய்ப் பால் நன்கு சுரக்கும். குழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும். நுங்கை மசித்து வியர்க்குரு கட்டிகள் இருக்கும் இடத்தில் பூசினால் விரைவில் சரியாகும். தோலும் மினுமினுப்படையும். 


நுங்கை அரைத்து தேங்காய்ப் பால் சேர்த்துக் குடித்தால் அல்சர், வயிற்றுப்புண் பிரச்சினைகள் தீரும். இப்படி ஏராளாமான நன்மைகள் நுங்கில் இருக்கின்றன.

எனவே நுங்கை சாப்பிடுவோம், ஆரோக்கிய வாழ்வை வாழ்வோம்.

Previous Post Next Post