-->

எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் பயன்கள்



எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உண்டாகும் நன்மைகள் 

இன்றைய காலகட்டத்தில் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் கிட்டதட்ட மறைந்து விட்டது. முன்பெல்லாம் வாரம் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்து குளிப்பார்கள். ஆனால் இப்போதோ மாதம் ஒருமுறையே அரிதாகிவிட்டது. இது ஏதோ சம்பிரதாயத்திற்காக ஏற்பட்ட பழக்கமல்ல. நமது முன்னோர்கள் நாம் நலமுடன் வாழக் கண்டறிந்த நோய் தடுப்புமுறையாகும்.

எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் ஏற்படும் பலன்கள் 



1. உடலில் உள்ள அதிகபடியான சூட்டை சமநிலைக்கு கொண்டு வந்து, உடலின் நோயெதிர்ப்புத் திறனை அதிகரித்து உடலை சூடு சம்பந்தமான நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
2. இரைப்பு, இளைப்பு நோய்கள், மூக்கடைப்பு, உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம், முகத்தில் உண்டாகும் சரும நோய்கள், அதிகப்படியான வியர்வை போன்றவை நீங்கும். 
3. உடலில் உள்ள ஐம்புலன்களுக்கும் பலம் உண்டாகும். தலை, முழங்கால்கள் உறுதியடையும். முடி கறுத்து வளரும். தலைவலி, பல்வலி நீங்கும். 
4. தோல் வறட்சி நீங்கி தோல் மினுமினுப்பாகும். உடல் பலமாகும், சோம்பல் நீங்கும், நல்ல குரல் வளம் உண்டாகும். நாவின் சுவையின்மை நீங்கும்.

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் முறை


எண்ணெய் தேய்த்துக் குளிக்க நல்லெண்ணெயையே பயன்படுத்த வேண்டும். எண்ணெய் தேய்க்கும் பொழுது, எண்ணெயை ஒவ்வொரு காதிற்குள்ளும் மூன்று துளிகளும், ஒவ்வொரு மூக்கு துவாரத்திலும் இரண்டு துளிகளும், பின் கண்களில் இரண்டு துளிகளும் விட்டு, பின் மெதுவாக தலை உச்சியிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் சூடு பறக்க தேய்க்க வேண்டும்.

 காதில் எண்ணெய் விடுவதினால் தலையில் வரக்கூடிய நோய்களும், கண்களில் விடுவதினால் காதின் நோய்களும், உள்ளங்கால்களில் தேய்ப்பதினால் கண் நோய்களும், தலையில் தேய்த்து குளிப்பதால் அனைத்து நோய்களும் குணமாகும் என்று சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எண்ணெய் தேய்த்தவுடன் உடனே குளிக்காமல் சிறிது நேரம் கழித்து (குறைந்தது அரை மணி நேரம்) குளிக்க வேண்டும். அவ்வாறு குளிக்கும் போது எண்ணெயிலுள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படும். ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க சுமார் 60 மி.லி. நல்லெண்ணெய் தேவைப்படும். 

எண்ணெய் குளியல் அன்று செய்ய வேண்டியவை


 1. நல்லெண்ணெய் தேய்த்து சுமார் 30 நிமிடம் ஊறவைத்துப் பின் இளஞ்சூடான வெந்நீரில் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். அதிகாலையிலேயே குளித்து முடித்துவிட வேண்டும்.

 2. வாரமிருமுறை அதாவது, ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது என்று சித்த மருத்துவம் கூறுகிறது. 



எண்ணெய் குளியல் அன்று செய்ய கூடாதவை

1. அதிக வெயிலில் அலையக்கூடாது. குளிர்ந்த உணவுகளான பானங்கள், ஐஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாது. அன்றைய தினம் உடலுறவு வைத்து கொள்ளக் கூடாது. நண்டு, கோழி, மீன், செம்மறி ஆடு போன்ற அசைவ உணவுகளைத் அன்றைய தினம் தவிர்த்து விட வேண்டும்.

Previous Post Next Post