-->

உங்களுக்கு ஏற்படும் பொதுவான கனவுகளுக்கான பலன்கள்


 பொதுவான கனவு பலன்கள்

  1. பிரதமர், ஜனாதிபதி, மற்றும் பெரிய பதவியில் உள்ளவர்களுடன் அறிமுகம் ஏற்படுவதாகக் கனவு கண்டால், சமூகத்தில் அந்தஸ்தும் மதிப்பும் ஏற்படும்.
  2. மணமாகாத இளம்பெண் இவ்வாறு பெரிய பதவியில் உள்ளவர்களுடன் பழகுவது போல கனவு கண்டால், அவளை மணம் முடிக்க வரப்போகும் ஆண், அந்த பெண்ணின் குடும்பத்தைவிட பலமடங்கு வசதியுடன் இருப்பான் என்று கூறலாம். 
  3. அரச குடும்பத்தில் உள்ளவர்களுடன் பழகுவதாக கனவு வந்தால், நண்பர்கள் மூலமாக பொருள் உதவி கிடைக்கும்.
  4. தேவலோகப் பெண்களை கனவில் கண்டால், எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். 
    கனவில் தேவதை
  5. இதே தேவலோகப் பெண்களை திருமணமாகாத பெண்கள் கண்டால், விரைவில் திருமணம் நிகழும். மணமான மங்கையர் கண்டால், பொருள் வரவு உண்டு. 
  6. அழகே இல்லாத பெண் ஒருத்தியை, மணமாகாத ஓர் ஆண் கனவில் கண்டால் அவனுக்கு மிகவும் அழகான பெண் மனைவியாக வருவாள்.
  7. அதிசய மனிதர் அல்லது நூதனமான பொருட்களை கனவில் கண்டால் தீமை சுட்டிக்காட்டும். நம்பிக்கை மோசடி – ஏமாற்றபடலாம்.
  8. அடிதடி, சண்டை சச்சரவுகளில் சிக்கிக் கொண்டு தவிப்பதுபோல் கனவு வந்தால், கனவு கண்டவரது வாழ்க்கை அமைதியானதாக எல்லோருடனும் சுமுக உறவு கொண்டதாக இருக்குமாம்.
  9. சண்டை ஏற்பட்டு பிறர் நம்மை அடிப்பது போன்று கனவு கண்டால் அவர்களுக்கு விரோதிகளே இருக்க மாட்டார்களாம்.
  10. நீங்கள் பிறரை அடிப்பதாகக் கனவு கண்டால், நண்பர்களால் புகழப்படும் நிலை உருவாகும். புதிய நண்பர்கள் உருவாவார்கள், புகழ் பெருகும்.
  11. நீங்கள் அடிபட்டு காயமடைவது போல கனவு கண்டால், பொருள் அபிவிருத்தி ஏற்படும் என்று அர்த்தம். 
  12. கத்தி போன்ற ஆயுதங்களால் அடிபட்டு காயமடைவது போல கனவு கண்டால் நல்லதல்ல, வீண் பழி ஏதேனும் வந்து சேரும். 
  13. நீங்கள் அழுது கொண்டிருப்பது போல் கனவு கண்டால் உங்கள் வாழ்க்கையில் புதிய இடையூறுகள் ஏற்படக்கூடும்.
  14. உங்களுக்கு அபாயமும், தொல்லைகளும் ஏற்படுவது போல கனவு கண்டால், வாழ்க்கை மகிழ்ச்சியாக, நிம்மதியாக இருக்கும். 
  15. பிறர் அபாயத்தில் சிக்கியிருப்பதுபோல் கனவு கண்டால், நண்பர்களால் தொந்தரவு ஏற்படக்கூடும்.
  16. அரிசியைக் கனவில் கண்டாலோ, சந்தையில் வாங்கி வருவதுபோல் கனவு கண்டாலோ தொழில் மேன்மை அடையும், தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
  17. ஆண்கள் கறுப்பு நிற அன்னப்பறவையை கனவில் கண்டால் பெரும் ஏமாற்றங்கள் ஏற்படும்.
  18. வெள்ளைநிற அன்னப்பறவையை கனவில் கண்டால், கனவு கண்டவரின் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும்.
  19. குரு, ஆசிரியர் ஆகியோரை கனவில் கண்டால் கனவு கண்டவர் வாழ்க்கை அமோகமாக இருக்கும் என்று அர்த்தம். 
  20. ஆலமரத்தை கனவில் கண்டால், செய்கின்ற தொழில் மென்மேலும்  வளர்ச்சி அடையும என்று பொருள். 
  21. வயதில் மூத்தவர்கள் அல்லது மகான்கள் உங்களை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்வது போல கனவு கண்டால், தொழிலில் உயர்வும், பொருள் சேர்க்கையும் உண்டாகும்.
  22. நீங்கள் மெலிந்து விட்டது போல கனவு கண்டால் உங்கள் குடும்பத்தின் நிலை மேன்மை அடையும்.
  23. இரும்பை கனவில் காண்டால் கனவு கண்டவருக்கு மனோவலிமை அதிகம் இருக்கும் என்று அர்த்தம். 
  24. அலுவலகத்தில் வேலை செய்வது போல கனவு கண்டால் நல்லகாலம் நெருங்கி விட்டதுஎன்று பொருள். நீண்ட காலமாக வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும்.
  25. வேலையிலிருந்து நீக்கப்பட்டது போல கனவு கண்டால், அவ்வாறே நிகழ வாய்ப்பு உண்டு. அப்படியில்லாமல், வேலையில் நிர்வாகத் தவறுகள் செய்து, மேலிட விரோதத்தைச் சம்பாதிக்க நேரிடலாம் என்று பொருள். 
  26. சொந்த தொழில் செய்பவர்கள், அதில் பிரச்சனைகள் உண்டாவது போல கனவு கண்டால், தொழிலில் புதிய சிக்கல்கள் ஏற்படலாம்.
  27. விவசாயம் செய்வது போல கனவு கண்டால், அவரது வாழ்க்கை வளமானதாக இருக்கும். 
  28. கோவில் தேரோட்டத்தை கனவில் கண்டால், உறவினர் ஒருவரின் மரணச் செய்தி வரலாம் என்று அர்த்தம்.
  29. நீங்கள் மட்டும் தனியாக சாப்பிடுவது போல கனவு வந்தால் துன்பங்கள் ஏற்படும். தொழிலில் நஷ்டங்கள் ஏற்படும்.
  30. விருந்து சாப்பிடுவது போல கனவு கண்டால், உத்தியோக உயர்வு ஏற்படும். 
  31. திருமணம் ஆகாதவர்கள் விருந்து சாப்பிடுவது போல கனவு கண்டால் கூடிய விரைவில் திருமணம் நடைபெறும். 
  32. திருமணம் ஆனவர்கள், விருந்து சாப்பிடுவது போல கனவு கண்டால் கூடிய விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும். 
  33. நீர் ஊற்றைக் கனவில் கண்டால், கனவு கண்டவர் வாழ்க்கையில் துன்பம் ஏற்படாது.
  34. எதிரிகளை கனவில் கண்டால், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அர்த்தம். 
  35. கனவில் எலும்பைக் கண்டால் மிகவும் நல்லது. 
  36. மனிதர்களின் எலும்பை கனவில் கண்டால், முன்னோர் விட்டுச் சென்ற சொத்து அவருக்கு கிடைக்கும் என்று பொருள்.
  37. பேனாவை கனவில் கண்டால், கடிதம் வாயிலாக பொருள் வரவு ஏற்படும் என்று அர்த்தம்.
  38. எழுதிக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால், நல்ல செய்திகள் அவரை தேடி வரும்.
  39. எண்ணெயை தேய்த்து குளிப்பது போல கனவு கண்டால் கனவு காண்பவர் விரைவில் நோயால் பாதிக்கக்பட போகிறார் என்று அர்த்தம்.
  40. கனவில் நீங்கள் ஏழையாகி விட்டது போல கனவு வந்தால், எதிர்பாராத வகையில் அவருக்கு செல்வம் வந்து சேரும். எல்லா வகையிலும் முன்னேறி உயர்ந்த நிலையை அடைவார்கள் என்று பொருள்.
  41. நீங்கள் ஏமாற்றப்பட்டது போல் கனவு கண்டால், தீமை ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்று அர்த்தம்.


Previous Post Next Post