-->

இராமாயணத்தில் மிகப் பெரிய தியாகம் செய்தவர் யார் என்று தெரியுமா?


இராமாயணத்தில் மிகப் பெரிய தியாகம் செய்தவர்


இராமாயணத்தில் மிகப் பெரிய தியாகம் செய்தவர்கள் யார் என கேட்டால் ராமர், லட்சுமணன், சீதை, அல்லது ஆஞ்சநேயர் என்று உடனடியாக பதில் வரும். ஆனால் உண்மையில் இவர்கள் யாரும் அல்ல. பிறகு யார் தான் என நீங்கள் கேட்டால் அதற்க்கு பதில் சீதையின் சகோதரியும் லட்சுமணனின் மனைவியுமான ஊர்மிளா ஆவார். 



ராமாயணத்தில், ராமர் - சீதையின் காதல் கதை தெரிந்த அளவிற்கு, லட்சுமணன் - ஊர்மிளையின் காதல் கதை பெரும்பாலனோர்க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. லட்சுமணன், இராமருடன் 14 ஆண்டுகள் வனவாசம் சென்ற பிறகு ஊர்மிளா அரண்மனையில் ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததாக நினைத்தால் அது மிகப் பெரும் தவறு. ராமாயண போரின் வெற்றிக்கு முக்கிய காரணமே ஊர்மிளையின் தியாகம் தான்.

ஊர்மிளா சீதையின் சகோதரி ஆவார் .இவருக்கு லட்சுமணனை கண்டதும் காதல் வரவில்லை. ஆனால் தன் சகோதரியான சீதையை பிரிய மனமில்லாமல், லட்சுமணனை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார். எனினும், இருவருக்குள்ளும் ஒரு காதல் கதை ஒளிந்திருந்தது. 



ராமர் மன்னரின் கட்டளைப்படி வனவாசம் செல்லும் போது அவர் மீது அளவுகடந்த அன்பை வைத்திருந்த லட்சுமணன் தன் மனைவியிடம் கூட கேட்காமல் அவருடன் வனவாசம் செல்ல தயாரானார்.ஆனாலும் லட்சுமணன் தன் முடிவை ஊர்மிளாவிடம் சொல்லத் தயங்கினார். .ஏனெனில், சீதையைப் போல ஊர்மிளாவும் தன்னுடன் வனவாசம் வருகிறேன் என்று சொல்லி விட்டால் என்ன செய்வது? என்று குழம்பிப் போனார். ஆனாலும் ஒருவழியாக தைரியத்தை வரவழைத்து கொண்டு ஊர்மிளாவிடம் சொல்ல செல்லும் போது, அங்கு லட்சுமணனுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

ஊர்மிளா தன்னை மகாராணி போல அலங்கரித்து கொண்டு பொன் நகைகளை அணிந்து கொண்டிருந்தார். அதனைக் கண்டு ஆத்திரம் கொண்ட லட்சுமணன், உனது சகோதரியும் என்னுடைய அண்ணனும் வனவாசத்திற்கு புறப்படும் நேரத்திலும், எந்த கவலையும் இல்லாமல் உன்னை இப்படி அலங்கரித்துக் கொண்டு ராஜ வாழ்க்கைக்கு ஆசைப்படுகிறாய், இனி உன் முகத்தில் விழிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு கோபத்துடன் சென்றார்.

தன் கணவர் தன் மீது கோபத்துடன் சென்றாலும் அதைத்தான் ஊர்மிளாவும் விரும்பினார். காரணம், தானும் லட்சுமணனுடன் வனவாசம் சென்றால் அல்லது இங்கே அவரை நினைத்து வருத்தத்துடன் இருந்தாலோ, அவர் தன் கடமையை முழுவதுமாக செய்ய இயலாது என்பதை நன்கு அறிந்திருந்தார் ஊர்மிளா. அதனால் தான் அவர் ராஜ வாழ்க்கைக்கு ஆசைப்படுவது போல லட்சுமனணன் முன் நடித்து லக்ஷ்மணனை கோபம் அடைய செய்தார். இனி வனவாசம் முடியும் வரை அவர் ஒரு நொடி கூட தன்னுடைய நினைவு இல்லாமல், அவருடைய கடமையை முழு மனதுடன் செய்வார் என நம்பினார் ஊர்மிளா.


வனவாசத்தில் ராமர் மற்றும் சீதைக்கு பாதுகாப்பு கவசமாக லட்சுமணன் இருந்தார் என்றால், லட்சுமணனுக்கு பாதுகாப்பு கவசமாக இருந்தது ஊர்மிளாவின் எல்லை கடந்த அன்புதான். இரவும் பகலும் தன் அண்ணனையும் சீதையையும் காக்க நினைத்த லட்சுமணன் தான் 14 ஆண்டுகள் தூங்ககூடாது என்று நித்திராதேவியிடம் வரம் கேட்டார்.. ஆனால், அதற்கு தூக்கத்தின் கடவுளான நித்திராதேவி சம்மதிக்கவில்லை.



அப்பொழுது தன் கணவரின் கடமைக்காக அவருடைய தூக்கத்தையும் சேர்த்து நான் தூங்குகிறேன் என்று நித்ரா தேவியிடம் கோரிக்கை வைத்து, மன்றாடி நித்திராதேவியிடம் வரம் பெற்றார் ஊர்மிளா. தூங்குவதுதெல்லாம் மிகப்பெரிய தியாகமா? என்று நினைக்கலாம். ஆனால், உணவின்றி 14 ஆண்டுகள் லட்சுமணனுடைய தூக்கத்தையும் சேர்த்து தூங்குவது சாதாரண தியாகம் அல்ல. இதனால் ஊர்மிளா தன்னுடைய ஆரோக்கியம் பெரியாளவில் பாதிக்கக்கூடும் என்று தெரிந்தும் தன் கணவரின் மீது கொண்ட காதலுக்காக அதனை செய்ய முன்வந்தார்.



இலங்கையில் நடந்த போரில், இராவணனின் மகன் இந்திரஜித்தை வெற்றி கொள்வது என்பது ராமர் மற்றும் வானர சேனைகளுக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில், இந்திரஜித் மிகவும் ஆக்ரோஷமாக சண்டையிட்டார். இதற்க்கு காரணம், இந்திரஜித் வாங்கிய வரம் எவன் ஒருவன் 14 ஆண்டுகள் தூங்காமல் இருக்கிறானோ, அவனால் மட்டுமே தான் கொல்லப்பட வேண்டும்என்று வரம் பெற்றிருந்தார். அதன்படி லட்சுமணன் தூக்கத்தையும் சேர்த்து ஊர்மிளா 14 ஆண்டுகள் தூங்கியதால் இந்திரஜித்தை வெற்றி கொள்ளகூடிய தகுதி பெற்ற ஒரே ஆளாக லட்சுமணன் இருந்தார். இறுதியில் இந்திரஜித்தை லட்சுமணன் வதமும் செய்தார். அதன் பிறகு தான் ராமரால் ராவனணனை வெல்ல முடிந்தது. ஊர்மிளாவின் தியாகம் இல்லை என்றால் இராமரால் போரில் வெல்வது மிகக்கடினமாய் இருந்திருக்கும்.


இராமர் விஷ்ணுவின் அவதாரம், சீதாதேவி லட்சுமியின் அவதாரம், லட்சுமணன் ஆதிசேஷனின் அவதாரம், இவர்கள் தங்களின் கடமையை செய்ய தியாகங்கள் செய்ததைக் காட்டிலும், மனித பிறவியான ஊர்மிளா தன் கணவரின் மீது கொண்ட காதலுக்காக செய்த தியாகம் மிகப் பெரியது.


Previous Post Next Post