-->

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - கன்னி


குரு பெயர்ச்சி கன்னி ராசி


சொந்த பந்தங்களை எந்த ஒரு சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்காத கன்னி ராசி அன்பர்களே !

இது நாள் வரையில் குரு பகவான் உங்களது ராசிக்கு 3 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்து அதிக அளவில் சோதனைகளை செய்து வந்தார். ஆனால், வாக்கிய பஞ்சாங்கப்படி 28.10.2019ம் தேதியும் திருக்கணிதப்படி 5.11.2019 தேதியும் உங்களது ராசிக்கு 4 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இதனால் பெரிய நன்மைகள் இல்லாவிட்டாலும் கூட முன்பு இருந்த நெருக்கடிகள் படிப்படியாக விலகும் என்பது உறுதி. அதாவது புரியும் படி சொல்ல வேண்டும் எனில் 3 ஆம் இடம் என்னும் மிக மோசமான இடத்தில் இருந்து குருபகவான் பரவாயில்லை என்கிற நிலைக்கு தற்போது வந்துள்ளார்.

குரு பெயர்ச்சி கன்னி ராசி 2019 பலன்கள்


இதனால் உங்களது முன்னேற்றத்தில் முன்பு இருந்த தடைகள் அனைத்துமே விலகும். எனினும் குரு சுகஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் அலைச்சலை தவிர்க்க முடியாது தான். எனினும் அந்த அலைச்சலுக்கு உரிய நற்பலன்கள் அடுத்த குரு பெயர்ச்சியில் உங்களுக்கு கிடைக்கப்பெறும். முடிந்த வரையில், என்ன தான் வேலை பளு அதிகம் இருந்தாலும் கூட நேரத்திற்கு உண்டு - உறங்க முயற்சி செய்யுங்கள். மற்றபடி, சொத்துக்கள் வாங்கும் சமயத்தில் பிறர் வஞ்சகப் பேச்சில் மயங்காமல், நன்கு யோசித்து முடிவு செய்யுங்கள். இதனால் வீண் விரயங்களை நீங்கள் எதிர்காலத்தில் தவிர்க்க இயலும். எனினும் இந்த குரு பெயர்ச்சியில் சிலருக்குப் பெரிய மனிதர்களின் சகவாசம் கிடைக்கப்பெறலாம். இதனால் செய்யும் முயற்சிகளில் எளிதாக வெற்றி அடைவீர்கள்.

உடல் ஆரோக்கியத்தில் மருத்துவ செலவுகள் குறையலாம். எனினும் உடலில் ஒரு வித அசதி இருந்து வரும். தேவை இல்லாத வீண் பிரயாணங்களை இனம் கண்டு தவிர்க்கப்பாருங்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை கடந்து லாபம் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் ஊதிய உயர்வு தாமதம் அடைந்தாலும் கூட இறுதியில் உங்களை வந்து அடையும். மற்றபடி, வெளிவட்டார பழக்கவழக்கங்கள் முன்பைக் காட்டிலும் அதிகரிக்கும். 24.1.2020 முதல் அர்த்தாஷ்டம சனி முற்றிலும் விலகுவதால், ஏராளமான நன்மைகளை நீங்கள் பெறுவீர்கள். அசையா சொத்துக்களில் இருந்து வந்த வில்லங்கம் அல்லது பிரச்சனைகள் கூட விலகி விடும். மொத்தத்தில் தீமைகள் பெருமளவில் குறைந்து பல நல்ல திருப்புமுனைகளை ஆனால் சற்றே தாமதமாகத் தரும் விதத்தில் தான் இந்தக் குருப் பெயர்ச்சி உங்களுக்கு இருக்கும்.

பெண்கள்:

உடலில் எப்போதுமே ஒரு வித சோர்வு காணப்படும். அதனை தவிர்க்க முடியாது தான். அவ்வப்போது சின்னச் சின்ன மருத்துவ செலவுகள் உங்களுக்கு வந்து போக இடம் உண்டு. கணவன் - மனைவிக்கு இடையே சின்னச் சின்ன சர்ச்சைகள் வந்து போனாலும் கூட அதனால் ஒற்றுமை குறையாது. மற்றபடி, அசையும் - அசையா சொத்துக்களில் சிறு, சிறு விரயங்களை நீங்கள் சந்திக்க இடம் உண்டு. முடிந்த வரையில் ஆடம்பர செலவுகளை குறைக்கப்பாருங்கள். காரணம் உங்களுக்குப் பணவரவு ஏற்ற இறக்கமாகத் தான் இருக்கும். உறவுகளுடன் பேசும் சமயத்தில் அதிக அளவில் நிதானத்தை கடைபிடிக்கப்பாருங்கள்.

உடல் ஆரோக்கியம்:

அவ்வப்போது சின்னச் சின்ன மருத்துவ செலவுகள் வந்து போனாலும் கூட அவற்றை எல்லாம் சமாளித்து இறுதியில் வெற்றி அடைந்து விடுவீர்கள். கூடுமான வரையில், எதையுமே ஒரு ஈடுபாட்டுடன் செய்ய முயற்சி செய்யுங்கள். திடீர் பயணங்கள் அவ்வப்போது அலைச்சலை தந்தாலும் கூட, அந்த அலைச்சலுக்கு உரிய நல்ல பலன்களை எதிர்காலத்தில் நீங்கள் அடைவீர்கள். மற்றபடி பெரிய அளவில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்பு குறைவு தான்.

குடும்பம் மற்றும் பொருளாதார நிலை:

பணவரவு சுமாராகத் தான் இருக்கும். முடிந்த வரையில் செலவுகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ளப்பாருங்கள். சிலர் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் பெரிய கடனில் இருந்து தப்பலாம். மற்றபடி, குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே சிறு, சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். எனினும், உற்றார் உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு படிப்படியாகக் குறையும். வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் வகையில் தேவை இல்லாத விரயங்கள் ஏற்பட இடம் உண்டு. தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்க இடம் உண்டு.

தொழில், வியாபாரம்:

தொழில், வியாபாரத்தில் திடீர் பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். இதனால் சிலர் வீண் அலைச்சலை சந்திக்க நேரிடலாம். போட்டி, பொறாமைகளால் சில வாய்ப்புகள் தட்டிப் போகலாம். அதனால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறப் பாருங்கள். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். பெரிய முதலீடுகளில் ஈடுபடும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். முடிந்த வரையில் அடுத்தவர் பிரச்சனையில் தலையிடாமல் இருப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்கள்:

பணியில் நிம்மதியான சூழ்நிலை காணப்படும். உடன் வேலை செய்பவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு தீரும். எனினும் ஊதிய உயர்வு தாமதம் ஆகலாம். சிலருக்கு அதிக நேரம் உழைக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இதனால் உடல் நிலை சோர்வடையும். உத்யோக ரீதியாக சிலர் அதிக அலைச்சலை சந்திக்க வேண்டி வரலாம். இது ஒரு சுமாரான கால கட்டம் தான். எனினும் முன்பு இருந்த நெருக்கடிகள் இனி இருக்காது அல்லது போகப் போக குறையும்.

அரசியல்வாதிகள்:

பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்து வரும். சில சமயங்களில் உங்களது கைக்காசை போட்டு கட்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். தேவை இல்லாத பயணங்களால் அலைச்சல் அதிகம் இருக்கும். நேரத்திற்கு உண்டு, உறங்க முடியாத நிலை காணப்படும். மேடையில் பேசும் சமயத்தில் அதிக நிதானத்துடன் இருந்து கொள்ளுங்கள்.

விவசாயம் செய்பவர்கள்:

அதிக பாடுகளுக்கு இடையே மகசூல் செய்ய வேண்டி இருக்கும். லாபமும் சுமாராகத் தான் இருக்கும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் தேவை இல்லாத விரயங்களை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப்பெறும். பழைய கடன்கள் சிலருக்குப் படிப்படியாகக் குறையும்.

மாணவ - மாணவியர்:

கல்வியில் மந்த நிலை போக சரஸ்வதி அல்லது ஹயக்ரீவரை வேண்டிக் கொண்டு படியுங்கள். இதனால் ஞாபக சக்தியும் பெருகும். உடல் நிலையில் சின்னச் சின்ன பாதிப்புகள் வந்து போகலாம். இதனால் சரியான முறையில் பள்ளிக்கு சென்று வர முடியாத நிலை ஏற்படலாம். ஆசிரியரின் அதிருப்தி சில சமயங்களில் உங்களை அச்சுறுத்தலாம். தேவை அற்ற நண்பர்களின் சகவாசங்களை விட்டு ஒழிப்பது நல்லது. படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இனிய எதிர்காலம் பிற்காலத்தில் உண்டு.

குரு பகவான் சஞ்சாரம் 28.10.2019 முதல் 4.1.2020 வரை :

இந்தக் காலத்தில் ஓரளவு சாதகமான பலன்கள் தான் ஏற்படும். எனினும், உடல் ஆரோக்கியத்தில் சிறு, சிறு பாதிப்புகள் ஏற்பட இடம் உண்டு. கொடுக்கல் - வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகையை ஈடுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். சிலர் கொடுத்த கடன்களை திரும்பிக் கேட்பதன் மூலமாக சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் கூட பல தடைகள் மற்றும் அலைச்சலைக் கடந்தே நடந்தேறும். பேச்சில் எப்போதுமே நிதானத்தை கடைபிடிப்பது உங்களுக்கு நன்மையை தரும். புத்திர வழியில் சிலருக்கு மனம் சஞ்சலம் அடையும். பூர்வீக சொத்துக்கள் விஷயத்தில் வீண் செலவுகள் சிலருக்கு ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் இப்போதைக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்யோகஸ்தர்கள் குறிப்பாக தங்களது பணியில் மட்டும் கூடுதல் கவனத்தை செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கு கல்வி ரீதியாக வீண் அலைச்சல் ஏற்பட இடம் உண்டு. தடைகள் அகல விநாயகப் பெருமானை அதிகம் வழிபட்டு வாருங்கள். இதனால் நன்மை உண்டு.

குரு பகவான் சஞ்சாரம் 5.1.2020 முதல் 7.3.2020 வரை :

பணவரவு இந்தக் காலத்தில் தேவைக்கு ஏற்றபடி இருந்து வரும். எனினும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. முடிந்த வரையில் தேவை இல்லாத கடன்களை முன்பே யூகித்துத் தவிர்க்கப் பாருங்கள். பணத்தை அதிக சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டிய தருணம் இது. எந்த ஒரு காரியத்திலும் ஒரு முறைக்குப் பல முறை நீங்கள் சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் ஒரு வித தொய்வு நிலை காணப்படும். உற்றார் - உறவினர்கள் இடையே சிறு, சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளை இந்தக் காலத்தில் அதிகம் செய்ய வேண்டாம். கொடுக்கல் - வாங்கல் போன்ற விவகாரங்களில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் சம்பந்தமாக அதிக எதிர்நீச்சல் போட்டு தான் நீங்கள் முன்னேற வேண்டி இருக்கும். தொழில் ரீதியாக சிலருக்குத் தேவை இல்லாத பயணங்கள் ஏற்பட இடம் உண்டு. மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல் பட்டால் எதிர்கால வாழ்க்கை சிறப்புடன் இருக்கும். பெளர்ணமியில் குறிப்பாக இந்தக் காலத்தில் நீங்கள் அம்பாளை அதிகம் வழிபட்டு வாருங்கள். நன்மை உண்டு.

குரு பகவான் சஞ்சாரம் 8.3.2020 முதல் 29.3.2020 வரை :

எதிலும் ஏற்ற - இறக்கமான நிலையே காணப்படும். பணவரவு தாமதம் அடையும். இதனால் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி ஆவதில் சுணக்கம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கூட கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்வது நல்லது. அசையா சொத்துக்களால் சில சுப செலவுகளை நீங்கள் சந்திக்க இடம் உண்டு. எதிர்பாராத இடத்தில் இருந்து தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கப்பெறும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அதிகம் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். கொடுக்கல் - வாங்கலில் பெரிய தொகையை நம்பி யாரிடமும் கொடுத்து விடாதீர்கள். இந்தக் காலத்தில் உங்கள் நண்பர்களில் சிலரே கூட உங்களை ஏமாற்ற இடம் உண்டு. மாணவர்கள் தேவை இல்லாத பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனத்தை செலுத்த வேண்டிய கால கட்டமாக இந்தக் கால கட்டம் உள்ளது.

குரு பகவான் சஞ்சாரம் 30.3.2020 முதல் 14.5.2020 வரை :

குரு பகவான் அதிச்சாரமாக பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலம் இது. இக்காலம் பெரும்பாலும் உங்களுக்கு நன்மையை தான் செய்யும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் இனி வரும் காலங்களில் படிப்படியாகக் குறையும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். முயற்சிகளில் தடை இன்றி வெற்றி கிடைக்கப்பெறும். குடும்பத்தில் சுப காரிய பேச்சு வார்த்தைகள் கூட வெற்றி அடையும். கணவன் - மனைவி இடையே வாக்கு வாதங்கள் தோன்றி மறையலாம். புத்திர வழியில் கூட மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் யாவும் நல்ல படியாக நடந்தேறும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். வெளியூர், வெளிநாடு தொடர்புடைய வியாபாரங்கள் கூட நல்ல வகையில் வெற்றி அடையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் இட மாற்றம் நல்ல படியாகக் கிடைக்கப்பெறும். சிலருக்கு பழைய கடன்கள் கூட அடைபடும். இன்னும் சிலர் இந்தக் காலத்தில் ஆடம்பர பொருள்களை வாங்கி மகிழ்வார்கள். கொடுக்கல் - வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்கள் கூட கல்வியில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

குரு பகவான் சஞ்சாரம் 15.5.2020 முதல் 12.9.2020 வரை :

குரு பகவான் வக்கிர கதியில் சஞ்சரிக்கும் காலம் இது. செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கப்பெறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அன்றாடப் பணிகளில் கூட சுறுசுறுப்புடன் செயல் படுவீர்கள். கணவன் - மனைவிக்கு இடையே சிறு, சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்பட்டாலும் கூட அதனால் குடும்ப அமைதி பெரிய அளவில் பாதிக்க வாய்ப்பு குறைவு தான். திருமணம் போன்ற சுப காரிய பேச்சுவார்த்தைகளில் அலைச்சல் இருந்தாலும் கூட இறுதியில் வெற்றி உண்டாகும்.

வியாபாரம் அல்லது தொழில் செய்பவர்களுக்கு அதிக போட்டிகள் இருக்கும். எனினும் இறுதியில் அப்போட்டிகளை எல்லாம் சந்தித்து வெற்றி பெறுவீர்கள். எனினும், அதன் தாக்கத்தால் நேரத்திற்கு உண்டு - உறங்க முடியாத நிலை காணப்படும். வெளியூர், வெளிநாடு தொடர்புடைய வியாபாரங்கள் செய்பவர்களுக்கு நன்மைகள் மேலோங்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்படுவார்கள். மாணவர்களுக்கு இது நாள் வரையில் கல்வியில் இருந்து வந்த மந்த நிலை படிப்படியாகக் குறையும். சிலர் விளையாட்டுப் போட்டிகளில் கூட பரிசுகளை வெல்லும் வாய்ப்பு கிடைக்கப்பெறும். மொத்தத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் நன்மை - தீமை என இரண்டும் கலந்து நடக்கும் காலமாக இந்தக் காலம் இருந்து வரும்.

குரு பகவான் சஞ்சாரம் 13.9.2020 முதல் 30.10.2020 வரை :

இந்தக் காலத்தில் ஒவ்வொரு முயற்சிகளிலும் எதிர் நீச்சல் போட்டுத் தான் முன்னேறும் படியான சூழ்நிலை காணப்படுகிறது. ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். எனினும் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல் படுவீர்கள். பணவரவு ஏற்ற - இறக்கமாக இருந்தாலும் கூட செலவு கட்டுக்குள் அடங்கும். கணவன் - மனைவி இடையே பேச்சில் அதிக நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கொடுக்கல் - வாங்கல் போன்ற விவகாரங்களில் பெரிய தொகையை ஈடுபடுத்தாமல் இருப்பது நன்மை அளிக்கும். திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகளில் தடைகளுக்குப் பிறகே வெற்றி கிடைக்கப்பெறும். உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வு தாமதம் அடையலாம். மாணவர்கள் வண்டிகளில் செல்லும் சமயத்தில் கவனமுடன் இருந்து கொள்ளுங்கள். வாகனங்களில் மட்டும் அல்ல...விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும் சமயத்தில் கூட கூடுதல் கவனத்துடன் நீங்கள் இருந்து கொள்ளுங்கள். மொத்தத்தில் அனைத்து தரப்பினருக்கும் இந்தக் காலம் ஒரு சுமாரான காலமாகவே இருந்து வரும்.

குரு பகவான் சஞ்சாரம் 31.10.2020 முதல் 20.11.2020 வரை :

இந்தக் காலத்தில் பொருளாதாரம் ஏற்ற - இறக்கமாகத் தான் காணப்படும். கணவன் - மனைவி இடையே அடிக்கடி சின்னச் சின்ன வாக்கு வாதங்கள் தோன்றி மறைய இடம் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எனினும், சிலருக்கு கடன்கள் படிப்படியாக குறைய வாய்ப்புகள் உண்டு. பூர்வீக சொத்து விஷயங்களில் வீண் செலவுகளை நீங்கள் சந்திக்க இடம் உண்டு. கொடுக்கல் - வாங்கலில் இருந்து வந்த தேக்க நிலை சற்றே குறையலாம். எனினும் பெரிய தொகையை கடனாகக் கொடுப்பதை முடிந்த வரையில் தவிர்க்கவும். சிலருக்கு வெளிவட்டார தொடர்புகள் நல்ல படியாக விரிவடையும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு இந்தக் காலத்தில் அதிகரிக்கும். அதன் தாக்கத்தால் சிலர் தெய்வ காரியங்களை எடுத்துச் செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் பெரும்படியான சூழல் காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் இது நாள் வரையில் இருந்து வந்த மந்த நிலை தீரும். சிலர் பாராட்டுக்களை அல்லது பரிசுகளை பெறுவார்கள்.

பரிகாரம்:

வியாழக் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி குலதெய்வத்தை வணங்கி வாருங்கள். மஞ்சள் நிற பூக்களை கொண்டு இறை தெய்வங்களை அர்ச்சுயுங்கள். ராகு/ கேதுக்களின் சஞ்சாரம் பெரிய நல்ல பலன்களை தரும் விதத்தில் இல்லை என்பதால் துர்க்கையை ராகு காலத்தில் அரளி சாற்றி வழிபாடு செய்து வாருங்கள். கேதுவுக்கு விநாயகரை அதிகம் வழிபடுங்கள். இதனால் மேற்கண்ட தீய பலன்கள் குறைந்து வாழ்க்கையில் ஏற்றம் பெறுவீர்கள்.


வணங்க வேண்டிய தெய்வம் : மகா விஷ்ணு

ராசியான திசை : வடக்கு

ராசிக்கல் : மரகத பச்சை

ராசியான கிழமை : புதன்

ராசியான நிறம் : பச்சை

ராசியான எண்கள் : 5,6,8


Previous Post Next Post