-->

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - மேஷம்


குரு பெயர்ச்சி மேஷ ராசி


அன்புக்கு அடிபணியும் மேஷ ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு இது வரையில் அஷ்டமத்தில் குரு பகவான் வீற்று இருந்தார். இதனால் பல துன்பங்களை நீங்கள் அடைந்து இருக்கலாம். இதோ உங்களது துன்பங்களுக்கான விடிவு காலம் வந்து விட்டது. வாக்கிய பஞ்சாங்கப்படி 28.10.2019ம் தேதியும் திருக்கணிதப்படி 5.11.2019 தேதியும் உங்களது ராசிக்கு 9 ஆம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கிறார். இந்தப் பெயர்ச்சி பல விதங்களில் உங்களுக்கு நல்ல திருப்பு முனையாகவே இருக்கும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நல்ல நிகழ்ச்சிகள் எல்லாம் நடந்தேறும். பணவரவு மேம்படும். இதனால் உங்களது தேவைகள் நல்ல படியாக நிறைவேறும். பழைய கடன்கள் கூட சிலருக்குப் படிப்படியாக அடைபட்டு விடும். சிலர் அசையும், அசையா சொத்துக்களை கூட வாங்கி மகிழலாம்.

குரு பெயர்ச்சி மேஷம்


முக்கியமாக தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப்பெறும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்து காத்திருந்த சலுகைகள் கூட கிடைக்கப்பெறும். தேக ஆரோக்கியம் கூடி எதிலும் ஒரு வித சுறு சுறுப்பு தென்படும். சமூகத்தில் உங்களது அந்தஸ்து உயரும். பெரிய மனிதர்களின் சகவாசம் கூட உங்களுக்கு கிடைக்கப்பெறும். பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் கூட ஒரு முடிவுக்கு வரும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். திருமணம் ஆகி பல காலம் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு கூட இறை அருளால் குழந்தை பாக்கியத்திற்கு வாய்ப்பு ஏற்படும். சிலர் வெளிநாடு சென்று வரலாம்.
உடன் பிறந்தவர்கள் கூட உங்களுக்கு நல்ல விதத்தில் உதவுவார்கள். எனினும் 24.1.20 க்கு பிறகு சனி 10 ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளதால் சிலருக்கு மேற்கண்ட தேதிக்கு பிறகு புதிய பொறுப்புக்கள் தேடி வரலாம். எனினும் வேலை பளு சற்றே அதிகரித்தாலும் சமாளித்து வெற்றி பெற்று விடுவீர்கள். மொத்தத்தில் உங்களுக்கு பெரும்பாலும் இந்த குரு பெயர்ச்சியால் நல்ல பலன்கள் தான் ஏற்படும்.

பெண்கள்:

உடல் ஆரோக்கியம் பல விதங்களில் உங்களுக்கு மேம்படும். பணவரவு கூட தேவைக்கு ஏற்றபடி மகிழ்ச்சி தரும். உங்களது குடும்ப தேவைகள் அனைத்தும் கூட நல்ல விதங்களில் பூர்த்தி ஆகும். சிலர் ஆடம்பர பொருள்களை வாங்கி மகிழும் பாக்கியம் கூட உண்டாகும். பழைய கடன்கள் கூட அடைபடும். குடும்ப உறுப்பினர்கள் இனி வரும் காலங்களில் உங்களை புரிந்து கொள்வார்கள். திருமண வயதை அடைந்த பெண்களுக்கு நல்ல வரன் தேடி வரும். சிலருக்கு காதல் விவகாரங்களில் வெற்றி கிட்டும். உத்யோகம் பார்க்கும் பெண்களுக்கு எதிர்பார்க்கும் நல்ல பலன்கள் வந்து சேரும்.

உடல் ஆரோக்கியம்:

உடல் ஆரோக்கியம் பெரும்பாலும் சிறப்பாகத் தான் இருக்கும். வெகு காலம் பல தரப்பட்ட மருந்து மாத்திரைகள் எடுத்து வந்தவர்களுக்குக் கூட இனி இந்த குரு பெயர்ச்சியால் மருத்துவ செலவுகள் பெருமளவில் குறையும். அன்றாடப் பணிகளில் கூட உற்சாகமாக ஈடுபடுவீர்கள். அப்படியே சனி பெயர்ச்சியால் சிறு, சிறு சஞ்சலங்கள் தோன்றினாலும் கூட குரு பலத்தால் அவற்றை எல்லாம் சமாளித்து நீங்கள் வெற்றி பெறுவீர்கள். ஏன்உங்கள் நெடுநாள் எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள்.

குடும்பம் மற்றும் பொருளாதார நிலை:

பொருளாதார நிலை மிகவும் சிறப்பாகத் தான் இருக்கும். கடன்கள் கூட படிப்படியாகக் குறையும். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்களை வாங்கும் பாக்கியம் கூட கிடைக்கப்பெறும். பூர்வீக சொத்து வகையில் கூட அனுகூலமான பலன்கள் உங்களுக்கு ஏற்படும். உற்றார் - உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் கூட ஒரு முடிவுக்கு வரும். திருமணம் போன்ற சுப காரியங்கள் கூட நல்ல படியாக நடந்தேறும். எனினும், ஜனவரி மாதத்திற்குப் பிறகு தேவை இல்லாத முன் கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்ளப் பாருங்கள். எனினும், பெரும்பாலும் நன்மைகள் தான் நடைபெறும்.

தொழில், வியாபாரம்:

தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை பெறுவார்கள். கூட்டாளிகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் கூட இனி வரும் காலங்களில் குறையும். எனினும் சனிப்பெயர்ச்சிக்கு பிறகு பேச்சில் மட்டும் கூடுதல் நிதானத்துடன் இருந்து கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக பிறருக்கு வாக்கு கொடுப்பதை தவிர்க்கப்பாருங்கள். வெளியூர் பயணங்கள் பெரும்பாலும் உங்களுக்கு அனுகூலத்தை தான் தரும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் பெரும்பாலும் உங்களுக்கு நன்மையை தான் செய்யும். புதிய வாய்ப்புகள் கூட தேடி வரும். கமிஷன் ஏஜென்சி, கான்டராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு சிறப்பான லாபம் கிடைக்கப்பெறும். கொடுக்கல் - வாங்கலில் கூட சரளமான நிலையே காணப்படும். வம்பு - வழக்குகள் இருந்தால் அது கூட ஒரு சாதகமான முடிவுக்கு வரும்.

உத்தியோகஸ்தர்கள்:

உத்யோகத்தில் படிப்படியாக மகிழ்ச்சியான காரியங்கள் எல்லாம் நல்ல படியாக நடந்தேறும். அலுவலகத்தில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு எதிர்பார்த்த சலுகைகள் என அனைத்தும் இனி வரும் காலங்களில் உங்களுக்கு கிடைக்கப்பெறும். வேலை பளு கூட படிப்படியாக குறையும். எனினும் சனிப்பெயர்ச்சிக்கு பிறகு சிலருக்கு புதிய பொறுப்புகள் தரப்படலாம். ஆனாலும், உடன் இருப்பவர்கள் அனுசரிப்பார்கள். அதனால் கவலை வேண்டாம். சிலருக்கு இந்த குரு பெயர்ச்சிக்குப் பிறகு விரும்பிய இடமாற்றம் கூட கிடைக்கப்பெறும். பெரும்பாலும் நல்லதே நடக்கும்.

அரசியல்வாதிகள்:

அரசியல் வாதிகளுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கப்பெறும். கடந்தகால அவப்பெயர்கள் எல்லாம் விலகி மேலிடத்திற்கு நீங்கள் நெருக்கம் ஆவீர்கள். முயற்சிகளில் கூட வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உங்களுக்கு கூடும். எனினும் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு மேடை பேச்சுக்களில் பேசும் சமயத்தில் மட்டும் நீங்கள் கொஞ்சம் நிதானத்தை கடைபிடித்துக் கொள்ளுங்கள். மற்றபடி, கட்சிப் பணிகளுக்கு நீங்கள் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி இருக்கலாம்.

விவசாயம் செய்பவர்கள்:

விவசாயம் செய்யும் முறையை மாற்றி நல்ல மகசூலை நீங்கள் பெறுவீர்கள். சிலர் புதிய தொழில் நுட்பத்தை தெரிந்து கொண்டு பயிர் செய்து வெற்றி அடைவீர்கள். இதனால் பணவரவு திருப்தி கரமாக இருப்பதுடன் உங்களது தேவைகள் கூட தக்க சமயத்தில் நிறைவேறும். சிலர் பழைய கடன்களை அடைத்து புதிய சொத்துக்களை கூட வாங்கும் பாக்கியம் உண்டாகும்.

மாணவ - மாணவியர்:

கல்வியில் இது வரையில் இருந்து வந்த மந்த நிலை தேக்க நிலை படிப்படியாக மாறும். நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு மதிப்பெண்கள் கிடைக்கப்பெறும். உடன் பழகுபவர்கள் ஆதரவு கூட உங்களுக்கு மகிழ்ச்சி தரும். சிலருக்கு படிப்பிற்கு தேவையான உதவிகள் கிடைக்கப்பெறும். விரும்பிய பாடத்தில் இடம் கிடைக்கும். ஆசிரியர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள்.

குரு பகவான் சஞ்சாரம் 28.10.2019 முதல் 4.1.2020 வரை:

இந்தக் காலம் உங்களுக்குப் பெரும்பாலும் அற்புதமான கால கட்டமாக இருக்கும். கணவன் - மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாகக் குறையும். தொழிலில் இருந்து வந்த தேக்க நிலை ஒரு முடிவுக்கு வரும். அதிலும் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு அரசு வழியில் மகிழ்ச்சியான அறிவுப்பு வந்து சேரும். பூமி, மனை வாங்கும் முயற்சிகள் சிலருக்கு சாதகம் ஆகும். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நல்ல பெயர் கூடும். அதிகாரிகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் ஒரு முடிவுக்கு வரும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள இந்தக் காலம் உங்களுக்கு நல்ல காலமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் அனுகூலத்தை பெறுவார்கள். அனைத்து தரப்பினருக்கும் இந்த மாதத்தில் அனுகூலமான பலன்களே ஏற்படும்.

குரு பகவான் சஞ்சாரம் 5.1.2020 முதல் 7.3.2020 வரை:

நீங்கள் நினைத்த காரியங்கள் நல்ல படியாக நடந்தேறும். இந்தக் காலங்களில் பெரும்பாலான கிரகங்கள் உங்களுக்கு சாதகமாகத் தான் உள்ளது. அதனால் கவலை வேண்டாம். திருமணம் போன்ற சுப காரியங்கள் கூட சிலருக்கு நல்ல படியாகக் கைகூடும். பணவரவு திருப்தி தரும். இதனால் உங்களது தேவைகள் நல்ல படியாக நிறைவேறும். சிலர் பழைய கடன்களை அடைப்பார்கள். சிலர் புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்வார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல திருப்பு முனைகள் ஏற்படும். கணவன் - மனைவி இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் குறையும். உற்றார்- உறவினர் ஆதரவு கூட உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். சண்டை போட்டுச் சென்றவர்கள் கூட சமாதானத்துடன் திரும்பி வருவார்கள்.

குரு பகவான் சஞ்சாரம் 8.3.2020 முதல் 29.3.2020 வரை :

உடல் ஆரோக்கியம் நல்ல விதமாக மேம்படும். இதனால் மருத்துவ செலவுகள் பலருக்கு குறையும். தொழில், உத்யோகம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் குறையும். தொழிலில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். சிலர் புதிய கிளைகளை கூட தொடங்கும் படியான வாய்ப்பு கிடைக்கப்பெறும். அசையும், அசையா சொத்துக்களை சிலர் வாங்க இடம் உண்டு. சனிப்பெயர்ச்சிக்கு பிறகு சனி 10 ஆம் இடத்திற்கு செல்வதால் சிலர் அதிக பிசியாக இருக்கலாம். சிலருக்கு தொழில் ரீதியாக அலைச்சல் அதிகரிக்கலாம். ஆனால் இவற்றை எல்லாம் ஈடுகட்டி குரு பார்வை உங்களுக்கு நல்ல திருப்பு முனைகளை தரும். அதனால் சனிப்பெயர்ச்சி பற்றிய பெரிய கவலைகள் வேண்டாம். சிலருக்கு வெளிநாடு செல்லும் பாக்கியம் இந்தக் காலத்தில் கிடைக்கப்பெறும். உத்யோகத்தில் கூட எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் உங்களை வந்து அடையும். மாணவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கும் நன்மைகளை பெறுவார்கள்.

குரு பகவான் சஞ்சாரம் 30.3.2020 முதல் 14.5.2020 வரை :

இந்தக் காலத்தில் குரு பகவான் அதிச்சாரத்தில் சஞ்சரம் செய்வதால், நன்மையான பலன்கள் சற்றே குறைந்து காணப்பட இடம் உண்டு. இதனால் திடீர் என்று தொழில், வியாபாரத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு வித தேக்க நிலை ஏற்பட இடம் உண்டு. தொழில் போட்டிகள் குறிப்பாக அதிகரிக்கும். இதனால் சொந்தத் தொழில் செய்பவர்கள் கொஞ்சம் திணறலாம். அதிலும் பெரிய அளவில் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் அதிகம் விட்டுக் கொடுக்க வேண்டி வரலாம். இந்தக் காலத்தில் புதிய முயற்சிகளை தவிர்த்து இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ்வது உங்களுக்கு நன்மைகளை செய்யும். பொருளாதார நிலை என்பது சுமாராகத் தான் இருக்கும்.
ஆடம்பர செலவுகளை குறிப்பாக இந்தக் காலத்தில் மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளப்பாருங்கள். இல்லையேல் கொஞ்சம் நீங்கள் அசந்து விட்டாலும் கூட புதிய கடன்கள் உதயம் ஆகி விடும். கொடுக்கல் - வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். காரணம், நீங்கள் மலை போல நம்பியவர்களே நெருக்கடி நிலையை ஏற்படுத்தி விடுவார்கள். மாணவர்கள் குறிப்பாக தேவை இல்லாத விவகாரங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அதிலும் உங்களது பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வியாழக்கிழமையில் நெய் விளக்கு ஏற்றி உங்கள் குல தெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை வணங்கி வாருங்கள். இதனால் மேற்சொன்ன தீய பலன்கள் குறைய இடம் உண்டு.

குரு பகவான் சஞ்சாரம் 15.5.2020 முதல் 12.9.2020 வரை :

இந்தக் கால கட்டத்தில் சோதனைகள் வந்தாலும் இறுதியில் சாதிப்பீர்கள். எதையும் சமாளிக்கும் ஆற்றலை நீங்கள் பெறுவீர்கள். கணவன் - மனைவி இடையே குறிப்பாக அந்நிய நபர்களை தலையிட விடாதீர்கள். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்மந்தமான பாதிப்புகள் சிலருக்குத் தோன்றி மறையலாம் எனினும் சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். ஆனால், அதனை சரியான விதத்தில் பயன்படுத்திக் கொள்வது என்பது உங்கள் கையில் தான் உள்ளது. மற்றபடி, கூட்டாளிகளை முடிந்தவரையில் அனுசரித்துச் செல்லுங்கள். உத்யோகத்தில் வேலை பளு இருந்தாலும் கூட அதனை சமாளித்து மேலதிகாரிகளின் பாராட்டை நீங்கள் பெறுவீர்கள். மாணவர்கள் சற்று கூடுதல் கவனம் செலுத்திப் படிக்க வேண்டிய காலம் என்றாலும்... மாணவர்கள் எதிர்பார்த்த நன்மைகளை இறுதியில் பெறுவார்கள். முருகப்பெருமானை சிவப்பு மலர் கொண்டு செவ்வாய் கிழமையில் நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். இதனால் சில தீய பலன்கள் குறைந்து நன்மைகள் ஏற்படும்.

குரு பகவான் சஞ்சாரம் 13.9.2020 முதல் 30.10.2020 வரை :

இந்தக் கால கட்டத்தில் பணவரவில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். எனினும், 23.9.2020 இல் நடக்க இருக்கு ராகு/ கேது பெயர்ச்சி உங்களுக்கு சாதகம் இல்லாத காரணத்தால் குடும்ப நபர்களை நீங்கள் அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். இதனால் உடல் ஆரோக்கியத்தில் சிறு, சிறு பின்னடைவுகளை திடீர் என்று சிலர் சந்தித்து அதன் பின்னர் விடுபடுவார்கள். எனினும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்பு குறைவு தான். சிலர் ஆடம்பர பொருள்களை இந்தக் காலத்தில் வாங்கி மகிழ்வார்கள். எனினும் கொடுக்கல் - வாங்கல் போன்ற விவகாரங்களில் பெருந்தொகையை கடனாகக் கொடுப்பதை தவிர்க்கவும். பெரிய தொகையை வங்கியில் இருந்து எடுத்துச் செல்லும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் சென்று வரவும்.

குரு பகவான் சஞ்சாரம் 31.10.2020 முதல் 20.11.2020 வரை :

இந்தக் காலத்தில் பெரும்பாலும் அனைத்து விதத்திலும் நீங்கள் அனுகூலமான பலன்களை தான் பெறுவீர்கள். சிலர் ஆடம்பர பொருள்களை வாங்கி மகிழலாம். குடும்பத் தேவைகள் கூட நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். கணவன் - மனைவி இடையே மட்டும் நிறைய கருத்து வேறுபாடுகள் வந்து போகலாம். அவற்றை பொறுமையாகப் பேசித்தீர்ப்பது நல்லது. உற்றார் - உறவினர்களிடம் பேசும் சமயத்தில் பேச்சில் அதிக நிதானத்தை கடைபிடியுங்கள். குடும்ப விஷயங்களை அந்நிய நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். 10 ஆம் இடத்தில் இந்தக் காலத்தில் சனி தொடர்ந்து சஞ்சரித்து வருவதால் தொழில் ரீதியாக போட்டி பொறாமைகள் இருந்தாலும் கூட அதையெல்லாவற்றையும் குரு அருளால் சமாளித்து இறுதியில் வெற்றி பெற்று விடுவீர்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.

பரிகாரம்:

24.1.2020
முதல் சனி பகவான் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் சனிப்பிரீதி மட்டும் செய்து கொள்ளுங்கள். குறிப்பாக உடல் ஒத்துழைத்தால் சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் ஸ்நானம் செய்யுங்கள். சனிக் கிழமைகளில் உணவுக்காக கஷ்டப்படும் ஏழை மாற்று திறனாளிகளுக்கு சைவ உணவை வாங்கித்தருவது கூட உங்களுக்கு நன்மை தரும். எந்த ஒரு தெய்வத்திற்கும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். கோளறு பதிகம் பாராயணம் செய்து வருவது கூட உங்களுக்கு நன்மையை அளிக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் : முருகப்பெருமான்

ராசியான திசை : தெற்கு

ராசிக்கல் : பவளம்

ராசியான கிழமை : செவ்வாய்

ராசியான நிறம் : சிவப்பு

ராசியான எண்கள் : 1,2,3,9

Previous Post Next Post