-->

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - கடகம்


குரு பெயர்ச்சி கடக ராசி


தனது எண்ணங்களில் விடாப்பிடியாக இருந்து இறுதியில் வெற்றி காணும் கடக ராசி அன்பர்களே,

உங்களது ராசியில் உச்சம் பெறக்கூடிய குரு பகவான் உங்களுக்கு ஒரு வகையில் நட்பு கிரகம் தான். அவர் இது நாள் வரையில் 5 ஆம் இடத்தில் இருந்து நன்மைகளை செய்து கொண்டு இருந்தார். வாக்கிய பஞ்சாங்கப்படி 28.10.2019ம் தேதியும் திருக்கணிதப்படி 5.11.2019 தேதியும் உங்களது ராசிக்கு 6 ஆம் இடத்தில் அமர்ந்து சஞ்சரிக்க இருக்கிறார். இது அந்த அளவிற்கு நல்ல சஞ்சாரம் இல்லை. இதன் அடிப்படையில் இனி வரும் நாட்களில் நீங்கள் பண விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். எனினும் பணத்தேவைகள் சுமாராக இருந்தாலும் கூட உங்களது குடும்பத் தேவைகள் அனைத்தும் நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். ஆனால், அதே சமயத்தில் யாரையும் விமர்சித்து பேசாமல் இருப்பது நல்லது. அத்துடன் முன்கோபத்தை குறைத்துப் பெரும்பாலும் நிதானமாக செயல்படப் பாருங்கள்.

குரு பெயர்ச்சி கடக ராசி பலன்கள்

அதேபோல, உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்துடன் நீங்கள் இருந்து கொள்ளுங்கள். குடும்பத்தில் கூட அந்நிய நபர்களின் தலையீட்டை தவிருங்கள். குடும்ப விஷயங்களை பிறரிடம் சொல்லாதீர்கள். கணவன் - மனைவிக்கு இடையே சிறு, சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையலாம். நண்பர்கள் கூட சற்றே விலகி இருக்கும் காலம். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் கூட ஏற்பட இடம் உண்டு. பெரிய முதலீடுகளை கூட பார்த்துச் செய்யுங்கள். கொடுக்கல் - வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் கூட கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். உத்யோகஸ்தர்களுக்கு திடீர் வேலை பளு வரலாம். பயணங்களால் அலைச்சல் அதிகம் இருக்கும். 24.1.2020 முதல் சனிப் பெயர்ச்சி உங்களுக்கு சாதகம் இல்லாத நிலையில் இருப்பதால் கவனமாக இருந்து கொள்ளுங்கள். குறிப்பாக குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்லப்பாருங்கள்.

பெண்கள்:

உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பணவரவு பெரிய அளவில் இல்லாவிட்டாலும் கூட சுமாராக இருந்து வரும். இதனால் உங்களது முக்கியத் தேவைகள் அனைத்தும் நல்லபடியாக நிறைவேறும். திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகள் அதிக அலைச்சல் தரலாம். பொறுமையாக செயல்பட்டு வெற்றி அடைய வேண்டிய கால கட்டம் இது. குடும்ப விவகாரங்களில் மற்றவர் தலையீட்டை தவிர்க்கவும். பணி புரியும் பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கலாம். சில பெண்களின் சேமிப்பு குறையலாம்.

உடல் ஆரோக்கியம்:

உடல் ஆரோக்கியத்தில் சிறு, சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். நேரத்திற்கு உண்டு உறங்க முடியாத நிலையில் பலர் இருக்கலாம். இதனால் உடலில் எப்போதுமே ஒரு வித அசதி இருந்து வரும். முடிந்த வரையில் வெளியிடங்களில் சாப்பிடும் சமயத்தில் கவனமாக இருந்து கொள்ளுங்கள். சிலருக்கு வயிற்று வலி அல்லது அடிக்கடி அஜீரணக் கோளாறுகள் ஏற்பட இடம் உண்டு. குடும்ப உறுப்பினர்கள் வழியில் கூட வீண் மருத்துவ செலவுகள் வந்து போகலாம். அதனால் கவனமுடன் இருந்து கொள்ளுங்கள்

குடும்பம் மற்றும் பொருளாதார நிலை:

பொருளாதார நிலை சுமாராகத் தான் இருக்கும். குறிப்பாக கொடுக்கல் - வாங்கல் போன்ற விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்வது நல்லது. திருமணம் போன்ற சுப காரியம் சம்பந்தமான முயற்சிகள் சற்றே தாமதம் ஆகலாம். சிலருக்குத் தெய்வ தரிசனத்தை மேற்கொள்ள வேண்டி வரலாம். முடிந்தவரையில் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளப்பாருங்கள். காரணம் இந்த குரு பெயர்ச்சியில் சிலருக்குத் தேவை இல்லாத கடன்கள் ஏற்படும் வாய்ப்பு காணப்படுகிறது.

தொழில், வியாபாரம்:

கமிஷன், ஏஜென்சி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் பெரிய முதலீடுகளை இனி வரும் காலங்களில் நன்கு யோசித்துப் பார்த்துச் செய்யவும். கொடுக்கல் - வாங்கல் போன்றவற்றில் கூட அதிகம் சிந்தித்துச் செயல் பட வேண்டி இருக்கும். பெரிய தொகையை கடன் கொடுப்பதை கூட கொஞ்சம் பார்த்துச் செய்யுங்கள். கொடுத்த கடனை வசூலிப்பதில் கூட அதிக நிதானத்துடன் இருந்து கொள்ளுங்கள். கூடுமான வரையில் அடுத்தவர் விஷயங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது உங்களுக்குப் பெருமை தரும். எனினும் உங்களது தொழில், வியாபாரத்தில் சில போட்டி, பொறாமைகளை நீங்கள் சந்தித்தாலும் கூட அதை எல்லாம் இறுதியில் சமாளித்து நீங்கள் வெற்றி பெறுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் தாமதம் அடைந்தாலும் கூட இறுதியில் உங்களுக்குக் கிடைக்கப்பெறும்.

உத்தியோகஸ்தர்கள்:

வேலை பளு அதிகரிக்கலாம். பொறுப்புகள் கூடலாம். எனினும் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றை உரிய நேரத்தில் அடைய இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். மற்றபடி கொடுத்த பணியை வழக்கம் போக சிறப்பாகவே முடித்து மேலதிகாரிகளின் பாராட்டை இறுதியில் பெறுவீர்கள். சமூகம் மற்றும் அலுவலகத்தில் உங்களுக்கு மரியாதை கூடும். ஆனால், அதற்கு உரிய இன்க்ரீமெண்ட் வர காத்திருக்க வேண்டி இருக்கலாம். அந்த வகையில் உங்களுக்கு சில மன உளைச்சல் ஏற்பட இடம் உண்டு. எனினும் எக்காரணம் கொண்டும் வேலையை விட்டு விடாதீர்கள். புதிய வேலை தேடுபவர்கள் கூட கிடைக்கும் வேலையை வாய்ப்பாகக் கருதிப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பயணங்களால் அலைச்சல் அதிகம் இருக்கும் தான். எனினும் இறுதியில் அனுகூலம் இல்லாமல் போகாது.

அரசியல்வாதிகள்:

அரசியல் வாதிகளுக்கு ஒவ்வொரு காரியத்திலும் தடைகளுக்குப் பிறகே வெற்றி என்கிற நிலை இருந்து வரும். கட்சிப் பணிகளுக்காக சில சமயங்களில் உங்களது கைக்காசை போட்டு செலவு செய்ய வேண்டி இருக்கும். தலைமையிடம் பேசும் சமயத்தில் கவனமாகப் பேசுங்கள். மக்கள் செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ள அதிக போராட வேண்டி இருக்கும். எதிர்பார்க்கும் நல்ல பதவிகள் கூட உங்களுக்கு தாமதம் ஆகலாம். மொத்தத்தில் பொறுமையுடன் செயல்பட்டு வெற்றி அடைய வேண்டிய கால கட்டம் இது.

விவசாயம் செய்பவர்கள்:

விவசாயிகளுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்க தாமதம் ஆகலாம். சில சமயங்களில் நீங்கள் எதிர்பாராத அளவில் மருத்துவ செலவுகள் கூட ஏற்பட இடம் உண்டு. குறிப்பாக கால் நடை வளர்ப்பவர்கள் கவனமாக இருந்து கொள்ளுங்கள். விலங்குகளுக்கு நோய் தொற்று வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். பங்காளிகளிடம் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்.

மாணவ - மாணவியர்:

கல்வியில் மந்த நிலை ஏற்பட இடம் உண்டு. போராடிப் படித்து நீங்கள் வெற்றி அடைய வேண்டி இருக்கும். எனினும், பெற்றோர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவித்தொகை தாமதம் அடைந்தாலும் கூட இறுதியில் நல்ல படியாகக் கிடைத்து விடும். பயணங்கள் அலைச்சலுடன் அனுகூலத்தையம் தரும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கப்பெறும். எனினும், நண்பர்களை மட்டும் கவனமாகத் தேர்ந்தெடுங்கள். மொத்தத்தில் சோதனைகளை கடந்து இறுதியில் நீங்கள் சாதிப்பீர்கள். அதனால் சூழ்நிலைகளை கண்டு அச்சம் கொள்ளாதீர்கள். படிப்பில் மட்டும் கவனம் செலுத்தப் பாருங்கள்.

குரு பகவான் சஞ்சாரம் 28.10.2019 முதல் 4.1.2020 வரை :

இந்த காலத்தில் பணவரவு பெரிய அளவில் இல்லாவிட்டாலும் கூட நிச்சயம் உங்களது தேவைகளுக்கு ஏற்றபடி இருக்கும். இதனால் அடிப்படை தேவைகளில் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது. தேவை இல்லாத முன்கோபம் மட்டும் அடிக்கடி வரலாம். அதனை குறைத்துக் கொள்வது உங்களுக்கு நன்மையை செய்யும். திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகளில் தடைகள் இருந்தாலும் இறுதியில் நல்ல படியாக நடந்தேறும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு முன்பை விட இப்போது அலைச்சல் அதிகமாக இருக்கும். சக ஊழியர்களிடம் குடும்ப விஷயங்களை பேசாமல் இருப்பது நல்லது. எதிர்பார்க்கும் பதவி உயர்வு சற்றே தாமதம் ஆகலாம். எனினும் மேலதிகாரிகளின் தயவு உண்டு. வியாபாரத்தில் கூட ஓய்வு இன்றி உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபத்தை பெற கூடுதலாக ஓட வேண்டி இருக்கும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற அதிகம் எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கப்பெறலாம். மொத்தத்தில் அனைத்துத் தரப்பினருமே சற்று பொறுமையாக இருந்து வெற்றி அடைய வேண்டிய கால கட்டமாக இந்தக் கால கட்டம் காணப்படுகிறது.

குரு பகவான் சஞ்சாரம் 5.1.2020 முதல் 7.3.2020 வரை :

சிறு, சிறு நெருக்கடிகளுக்கு இடையே எதிர்பாராத உதவிகள் உங்களுக்கு கிடைக்கப்பெறும். 24.1.2020 முதல் சனி பகவான் உங்களது ராசிக்கு 7 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் உடன் இருப்பவர்களை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். கணவன் - மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய கால கட்டமாக இந்தக் கால கட்டம் காணப்படுகிறது. உறவினர்களை கூட அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். பண விஷயத்தில் ஏற்ற - இறக்கமான சூழ்நிலை காணப்படும். அதனால் தேவை இல்லாத ஆடம்பர செலவுகளை குறைக்கப்பாருங்கள். ஆன்மிகம் மற்றும் தெய்வ காரியங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை சிலர் செலவு செய்யக்கூடும். சிலருக்குப் பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும் வாய்ப்பு உண்டு.
பணியில் வேலை பளு அதிகம் இருந்தாலும் கூட சக ஊழியர்கள் கொஞ்சம் ஒத்துழைப்பார்கள். இதனால் ஆறுதல் அடைவீர்கள். சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்பு கூட ஏற்படும். எனினும், எப்படிப் பார்த்தாலும் உத்யோகம் அல்லது பணியில் பதவி உயர்வு, சம்பள உயர்வு சற்றே தாமதம் ஆக இடம் உண்டு. மாணவர்கள் நண்பர்களை பார்த்துத் தேர்ந்து எடுங்கள். எனினும் மாணவர்களுக்கு அவ்வப்போது அரசு வழியில் தேவையான உதவிகள் கிடைக்கப்பெறும். மொத்தத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் இது ஒரு மத்திமமான காலம் எனலாம். பெரிய அளவில் நன்மை - தீமைகள் நடக்க வாய்ப்பு இல்லை.

குரு பகவான் சஞ்சாரம் 8.3.2020 முதல் 29.3.2020 வரை :

இந்தக் காலத்தில் எதிலும் நீங்கள் நிதானமாக செயல் பட்டீர்கள் என்றால் நெருக்கடிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். எப்படிப் பார்த்தாலும் ஆறாம் வீட்டில் கேது சஞ்சரிப்பது நன்மையை செய்யும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். இதனால் குடும்ப தேவைகள் பூர்த்தி ஆகும். அதில் எந்த பாதிப்பும் இருக்காது. எதிர்பாராத இடத்தில் இருந்து நீங்கள் எதிர்பாராத உதவி கூட இந்தக் காலத்தில் கிடைக்கப்பெறும். கணவன் - மனைவி இடையே வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அதிகம் அனுசரித்துச் செல்வது நல்லது. முடிந்த வரையில் குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருந்து கொள்ளுங்கள்.
சிலருக்கு அசையும், அசையா சொத்துக்கள் மூலம் வீண் செலவுகள் ஏற்பட இடம் உண்டு. கொடுக்கல் - வாங்கல் போன்ற விவகாரங்களில் ஈடுபடும் சமயத்தில் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்க தாமதம் ஆகலாம். சிலருக்கு பதவி உயர்வு கிடைத்தாலும் கூட சம்பளம் பெரிய அளவில் இல்லாமல் இருக்கலாம். எனினும், மாணவர்களுக்கு இந்தக் காலம் நல்ல திருப்புமுனை நிறைந்த காலமாக இருந்து வரும். ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கப்பெறும். மொத்தத்தில் இந்தக் காலத்தில் முற்பகுதி சோதனையை தந்தாலும் கூட பிற்பகுதியில் அனுகூலங்களுக்கு இடம் உண்டு.

குரு பகவான் சஞ்சாரம் 30.3.2020 முதல் 14.5.2020 வரை :

இந்தக் காலத்தில் பெரும்பாலான கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் பெரும்பாலும் நன்மைகள் தான் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்து காணப்படும். பெரும்பாலும் மறைமுக எதிர்ப்புகள் கூட மறையும். பணவரவு தேவைக்கு ஏற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த தொல்லைகள் படிப்படியாகக் குறையும். கொடுக்கல் - வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்தும் சமயத்தில் மட்டும் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். சனி இந்தக் கால கட்டத்தில் 7 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் கணவன் - மனைவி இடையே சிறு, சிறு வாக்குவாதங்கள் வந்து போக இடம் உண்டு. பேச்சில் மட்டும் நிதானத்துடன் இருந்து கொள்ளுங்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் பெருமளவில் குறையும். உத்யோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்படுவார்கள். மாணவர்கள் கடின முயற்சி எடுத்து படிக்க வேண்டி இருக்கும். எனினும் உங்களது முயற்சி வீண் போகாது. மொத்தத்தில் அனைத்து சாராருக்கும் தீமைகள் பெருமளவில் குறைந்து இந்தக் காலத்தில் பெரும்பாலும் நன்மைகள் தான் நடக்கும். அப்படியே சோதனைகள் வந்தாலும் கூட இறுதியில் அவை சாதனைகளாக மாறும்.

குரு பகவான் சஞ்சாரம் 15.5.2020 முதல் 12.9.2020 வரை :

இந்தக் கால கட்டத்தில் குரு பகவான் வக்கிர கதியில் சஞ்சாரம் செய்கிறார். உங்களது ராசிக்கு 6 ஆம் இடத்தில் கேது சஞ்சாரம் செய்கிறார். பெரும்பாலும் உங்களது முயற்சிகள் அனைத்தும் இறுதியில் நல்ல விதத்தில் பயன் தரும். பணவரவு திருப்தி தரும். இதனால் உங்களது பொருளாதார தேவைகள் அனைத்துமே நல்ல படியாக நடந்தேறும். குடும்பத்தில் கூட சுப காரிய பேச்சு வார்த்தைகள் மகிழ்ச்சி அளிக்கும். மொத்தத்தில் இந்தக் காலத்தில் நல்ல வாய்ப்புகள் எல்லாம் உங்களை தேடி வரும். அதனை பயன்படுத்திக் கொள்வது உங்களது சாமர்த்தியம். உத்யோகஸ்தர்கள் கூட இந்தக் காலத்தில் வாய்ப்பை பயன்படுத்தி தேவையான இடமாற்றங்களை பெற்றுக் கொள்ளலாம். மாணவர்களுக்கு படிப்பில் இருந்து வந்த மந்த நிலை படிப்படியாக மாறும். மொத்தத்தில் அனைத்து சாராருக்கு இது ஒரு நல்ல காலமாக இருக்கும்.

குரு பகவான் சஞ்சாரம் 13.9.2020 முதல் 30.10.2020 வரை :

இந்தக் காலத்தில் 23.9.2020 வரையில் நிறைய மறைமுக எதிர்ப்புகளை எல்லாம் சந்திப்பீர்கள். திடீர் என்று அனைத்திலும் ஒரு மந்த கதி ஏற்பட்டு இருப்பதை போல உணர்வீர்கள். ஆனால், கவலை வேண்டாம் 23.9.2020 இல் நடக்கும் ராகு/ கேது பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக உள்ளது. இதனால் எதையும் எதிர்கொண்டு நீங்கள் நல்ல ஏற்றங்களைப் பெறுவீர்கள். எனினும், சனி பகவான் தொடர்ந்து 7 ஆம் இடத்தில் இருப்பதால் கணவன் - மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகளில் தடைகள் இருந்தாலும் இறுதியில் அலைச்சலுக்குப் பிறகு நல்ல பலனை தரும்.
எனினும் இந்தக் காலத்தில் பணவரவு ஏற்ற - இறக்கமாகத் தான் இருக்கும், அதனால் உங்களது தேவைகளை நீங்கள் குறைத்துக் கொள்வது உத்தமம். கொடுக்கல் - வாங்கல் விவகாரங்களில் கவனமுடன் இருந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் கூட இறுதியில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கப்பெறும். இந்தக் காலத்தில் அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். முன்கோபத்தை மட்டும் இந்தக் காலத்தில் குறைத்துக் கொள்ளப்பாருங்கள். அதே போல, பேச்சில் அதிக நிதானத்தை கடைபிடிப்பது உங்களுக்கு நன்மையை தரும். உற்றார் - உறவினர்களை கூட அனுசரித்துச் செல்லுங்கள். மாணவர்களுக்கு தேவை இல்லாத பொழுது போக்குகள் காரணமாக படிப்பில் நாட்டம் குறையலாம். மற்றபடி பெற்றோர் - ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும்.

குரு பகவான் சஞ்சாரம் 31.10.2020 முதல் 20.11.2020 வரை :

உடல் ஆரோக்கியத்தில் சிறு, சிறு பாதிப்புகள் தோன்றி மறையலாம். உணவு விஷயத்தில் அதிகம் கட்டுப்பாட்டுடன் இருந்து கொள்வது நல்லது. பணவரவு ஓரளவு உங்களது தேவைகளை நல்ல படியாக நிறைவேற்றும். உற்றார்- உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். சிலர் ஆடம்பர பொருள்களை வாங்கி மகிழ்வார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். எனினும் கூட்டாளிகளை மட்டும் அதிகம் நீங்கள் அனுசரித்துச் செல்லுங்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு அவ்வப்போது மகிழ்ச்சி தரும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டு. சிலர் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவார்கள். மொத்தத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் மத்திம பலனையே தரும். இதனால் குரு பலம் இல்லாவிட்டாலும் கூட பெரிய தீமைகளுக்கு இடம் இல்லை.

பரிகாரம்:

குரு பகவானின் சஞ்சாரம் சாதகமாக இல்லாத காரணத்தால் வியாழக்கிழமைகளில் உங்களது குல தெய்வத்தை வாசனை மிகுந்த மஞ்சள் நிற பூக்களை கொண்டு அர்ச்சனை செய்வது வாருங்கள். அது நன்மை தரும். அதே போல, நெய் விளக்கு ஏற்றி வாருங்கள். பெளர்ணமியில் அம்பாளை வழிபட்டு வாருங்கள்.


வணங்க வேண்டிய தெய்வம் : அம்பாள்

ராசியான திசை: வடகிழக்கு

ராசிக்கல்: முத்து

ராசியான கிழமை: திங்கள்

ராசியான நிறம் : வெள்ளை

ராசியான எண்கள் : 1,2,3,9

Previous Post Next Post