-->

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - கும்பம்


குரு பெயர்ச்சி கும்ப ராசி


பொறுமையுடன் செயல்பட்டு இறுதியில் தெய்வ அருளால் வெற்றியைப் பெறும் கும்ப ராசி அன்பர்களே!

இது நாள் வரையில் உங்களது ராசிக்குப் பத்தாம் இடத்தில் குரு பகவான் சஞ்சாரம் செய்து கொண்டு இருந்தார். இதனால் நீங்கள் பல தீமையான பலன்களை அடைந்து இருக்கலாம். எனினும் வாக்கிய பஞ்சாங்கப்படி 28.10.2019ம் தேதியும் திருக்கணிதப்படி 5.11.2019 தேதியும் குரு பகவான் உங்களுக்கு லாபஸ்தானமான 11 ஆம் இடத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். இது குரு பகவானைப் பொறுத்தவரையில் ஒரு அற்புதமான இடம் ஆகும். இதனால் இனி வரும் காலங்களில் செலவுகள் கட்டுக்குள் அடங்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். சண்டை போட்டுச் சென்ற உறவுகள் உங்களை புரிந்து கொண்டு மீண்டும் வந்து உங்களுடன் இணைவார்கள். அது மட்டும் அல்ல, உங்களுக்கு ராகு / கேது சஞ்சாரம் கூட 23.9.2020 வரையிலேயே சாதகமாகத் தான் உள்ளது.

குரு பெயர்ச்சி கும்ப ராசி பலன்கள் 2019


குடும்பத்தில் இது நாள் வரையில் தடை பட்டு வந்த சுப காரியங்கள் கூட இனி வரும் நாட்களில் நல்ல படியாகத் தான் நடந்தேறும். பெரும்பாலும் ஈடுபடும் செயல்கள் அனைத்திலுமே வெற்றி கிடைக்கப்பெறும். கொடுக்கல் - வாங்கல் போன்றவற்றில் சிறப்பான பலன் தான் ஏற்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கூட எதிர்பார்க்கும் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை நிம்மதி அளிக்கும். அலுவலகத்திலும், வெளி வட்டாரத்திலும் உங்களது மதிப்பு சிறப்பாக உயரும். தேவைகள் கூட நல்ல விதத்தில் பூர்த்தி ஆகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட இது நாள் வரையில் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் குறையும். லாபம் ஏற்படும். புதிய முதலீடுகளை செய்து மகிழ்வீர்கள். குரு பார்வை கூட சிறப்பாக இருப்பதால் திருமணம் ஆகி குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியத்திற்காக வாய்ப்பு கிட்டும்.

அசையும், அசையா சொத்துக்களால் அனுகூலங்கள் ஏற்படும். எனினும், தற்போது 11 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் 24.1.2020 முதல் உங்களது ராசிக்கு விரயஸ்தானமான 12 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். பொதுவாகவே சனி பகவான் உங்களது ராசி அதிபதி என்பதால் பெரிய கெடுதலை செய்ய மாட்டார். ஆனாலும் கூட, உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்வது நல்லது. உணவு விஷயத்தில் பெரும்பாலும் கட்டுப்பாட்டுடன் இருந்து கொள்ளுங்கள். திடீர் தனவரவு ஏற்படுவதை நம்பி பணம் கைக்கு வராமலேயே பெரிய செலவுகளுக்கு திட்ட மிட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள். கணவன் - மனைவி இடையே சிறு, சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் கூட அதனால் ஒற்றுமை குறையாது. சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு வேகத்தை குறைத்துக் கொண்டு எதிலும் விவேகத்துடன் செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.

பெண்கள்:

உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கிய சம்பந்தமான பாதிப்புகள் படிப்படியாகக் குறையும். குடும்பத்தில் உள்ளவர்களால் மகிழ்ச்சி உண்டு. எனினும் பிள்ளைகள் வழியில் சிறு, சிறு கவலைகள் தோன்றி மறையலாம். எப்படிப் பார்த்தாலும் தேவை இல்லாத அலைச்சல், டென்ஷன் முன்பைக் காட்டிலும் இப்போது குறையும். இதனால் மனம் ஓரளவு அமைதி பெறும். மற்றபடி திருமண வயதை அடைந்த பெண்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திருமணம் ஆகி குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பணவரவு தேவைக்கு ஏற்றபடி இருக்கும். சிலருக்குப் பழைய கடன் கூட அடைபடும். பொன், பொருள் சேரும். பணி புரிபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற உயர்வு அனைத்து விதத்திலும் கிடைக்கப்பெறும். மொத்தத்தில் குரு பலம் பெரும்பாலும் உங்களுக்கு நன்மையை தான் செய்யும்.

உடல் ஆரோக்கியம்:

உங்களின் உடல் ஆரோக்கியம் இனி வரும் காலங்களில் சிறப்பாக இருக்கும். மருத்துவ செலவுகள் கூட இனி வரும் காலங்களில் படிப்படியாகக் குறையும். புதிய தெம்பு, புத்துணர்ச்சி வந்து சேரும். மொத்தத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் நன்மையான பலன்கள் வந்து சேரும்.

குடும்பம் மற்றும் பொருளாதார நிலை:

பணவரவு கணிசமாக இருந்து வரும். இதனால் தேவைகள் பூர்த்தி ஆகும். சிலர் ஆபரணங்கள் அல்லது ஆடமபர பொருள்களை கூட வாங்கி மகிழலாம். தடை பட்டு வந்த திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் அனைத்துமே நல்ல படியாக நடந்தேறும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகம் கிடைக்கப்பெறும். உற்றார் - உறவினர்களை ஓரளவு அனுசரித்து நடந்து கொண்டால் அதிக நன்மைகளை பெற இயலும். மொத்தத்தில் சனி 2020 ஜனவரி முதல் விரய ஸ்தானத்திற்கு வந்தாலும் கூட அதன் முதற் பகுதியில் குரு பலம் உங்களை காக்கும்.

தொழில், வியாபாரம்:

தொழில், வியாபாரத்தில் இது நாள் வரையில் இருந்து வந்த போட்டிகள் இனி குறையும். அரசு வழியில் கூட எதிர்பாராத நன்மைகள் கிடைக்கப்பெறும். தொழில் அல்லது வியாபாரத்தில் குறிப்பாக புதிய நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். கொடுத்த ஆர்டர்களை கூட உரிய நேரத்தில் சப்ளை செய்வீர்கள். சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை கூடும். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். புதிய கிளைகளை கூட சிலர் துவங்கலாம். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளுடன் இருந்து வந்த மோதல் போக்கு கூட சிலருக்குக் குறையலாம். மொத்தத்தில் தொழில் ரீதியாக அனைத்துத் தரப்பினருக்கும் நன்மைகள் உண்டு.

உத்தியோகஸ்தர்கள்:

பணியில் இது வரையில் இருந்த சோதனைகளும், வேதனைகளும் விலகி உற்சாகமான நிலை காணப்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு சிலருக்கு கிடைக்கப்பெறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கூட கிடைக்கப்பெறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ப நல்ல வேலை கிடைக்கப்பெறும். மொத்தத்தில் அனைத்து விதங்களிலும் நன்மைகள் மேலோங்கும்.

அரசியல்வாதிகள்:

பெயர், புகழ் உயரக் கூடிய காலமாக இந்தக் காலம் காணப்படுகிறது. மக்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். முயற்சிகளில் வெற்றி உண்டு. கட்சிப் பணிகளுக்காக வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்பு சிலருக்கு கிடைக்கப்பெறும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பெரும்பாலும் இந்த குரு பலம் உங்களுக்கு நன்மைகளைத் தான் செய்யும்.

விவசாயம் செய்பவர்கள்:

எதிர்பார்க்கும் வசூல் நல்ல படியாக கிடைக்கப்பெறும். காய், கனி, பூ போன்றவற்றால் லாபம் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் பொருளாதார நிலை மகிழ்ச்சி தரும். எப்படியும் நன்மைகள் மேலோங்கும். பழைய கடன்கள் கூட சிலருக்கு அடைபடும்.

மாணவ - மாணவியர்:

கல்வியில் உள்ள மந்த நிலை இனி வரும் காலங்களில் படிப்படியாகக் குறையும். உடல் சோர்வு நீங்கும். மனம் அலைபாயக் கூடிய நிலை மாறும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளிக்கும், கல்லூரிக்கும் பெருமையை தேடித் தருவீர்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டு கிடைக்கப்பெறும். மொத்தத்தில் அனைத்து விதத்திலும் நன்மைகள் மேலோங்கும்.

குரு பகவான் சஞ்சாரம் 28.10.2019 முதல் 4.1.2020 வரை :

பெரும்பாலும் நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடந்தேறும். பணம் பல வழிகளில் தேடி வரும். குடும்பத் தேவைகள் அனைத்தும் நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். கடன்கள் யாவும் படிப்படியாகக் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகள் கூட சாதகமான பலனைத் தரும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கிச் சேர்ப்பீர்கள். உற்றார் - உறவினர்களின் ஆதரவு கூட உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். கொடுக்கல் - வாங்கல் போன்றவற்றில் நல்ல நிலை காணப்படும். அதேபோல, கொடுத்த கடனை தடை இன்றி வசூல் செய்வீர்கள். பணி புரிபவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் பதவி உயர்வு வந்து சேரும். தொழில், வியாபாரம் தடை இன்றி நடைபெறும். மாணவர்களுக்கு கூட கல்வியில் நல்ல முன்னேற்றமான நிலையே காணப்படும். இப்படியாக அனைத்துத் தரப்பினருக்கும் நன்மைகள் உண்டு.

குரு பகவான் சஞ்சாரம் 5.1.2020 முதல் 7.3.2020 வரை :

இந்தக் காலத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும். செய்யும் முயற்சிகளில் நல்ல பலன் வந்து சேரும். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்களை வாங்கும் நோக்கம் நிறைவுபெறும். கொடுக்கல் - வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை காணப்படும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண இயலும். கொடுத்த கடன்கள் கூட தடை இன்றி நல்ல விதத்தில் வசூல் ஆகும். போட்டி, பொறாமைகள் மற்றும் மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் நல்ல படியாக விலகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை சிலருக்கு ஏற்படும். பயணங்கள் வழியில் கூட நன்மை உண்டு. உத்யோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் தேடி வரும். வெளியூர் அல்லது வெளிநாடு செல்லக் கூடிய வாய்ப்பு சிலருக்கு அமையப்பெறும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவிகள் கூட தேடி வரும். மாணவர்களுக்குப் பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டு மகிழ்ச்சி தரும். மொத்தத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் நல்ல காலமாக இந்தக் காலம் காணப்படுகிறது.

குரு பகவான் சஞ்சாரம் 8.3.2020 முதல் 29.3.2020 வரை :

இந்தக் கால கட்டத்தில் சகல விதங்களிலும் மேன்மைகள் உண்டு. பணவரவு தேவைக்கு ஏற்றபடி இருந்து வரும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் கூட இனி வரும் காலங்களில் படிப்பபடியாகக் குறையும். கணவன் - மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதாரம் மேம்படும். கடன்கள் ஓரளவு குறைந்து நிம்மதி ஏற்படும். எனினும் இந்தக் காலத்தில் ஏழரை சனி நடப்பதால் முடிந்த வரையில் பணம் கையில் இல்லாமல் வரும் என்று எதிர்பார்த்து அகலக் கால்களை வைத்து விடாதீர்கள். உற்றார் - உறவினர்களுடன் சிறு, சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் கூட அவர்களால் பெரிய தீமைக்கு இடம் இல்லை. திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகள் ஒரு பக்கம் அலைச்சலை தந்தாலும் கூட இறுதியில் நல்ல படியாகத் தான் நடந்தேறும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபங்கள் உண்டு. கூட்டாளிகளை அனுசரித்து நடந்தால் ஓரளவு நன்மையை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது நாள் வரையில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கப்பெறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள்.

குரு பகவான் சஞ்சாரம் 30.3.2020 முதல் 14.5.2020 வரை :

குரு பகவான் அதிசாரமாக 12 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால், பணவரவுகளில் ஏற்ற - இறக்கமான நிலை காணப்படும். முயற்சிகளில் சிறு, சிறு தோல்விகள் வந்தாலும் கூட இறுதியில் வெற்றி உண்டு. நீங்கள் எதிர்பாராத இடத்தில் இருந்து எதிர்பாராத உதவிகள் எல்லாம் கூட கிடைக்கப்பெறும். உடல் ஆரோக்கியத்தில் சிலருக்கு வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரக்கூடும். முடிந்த வரையில் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளப்பாருங்கள். காரணம், சிலருக்கு இந்தக் காலத்தில் புதிய கடன்கள் உருவாக இடம் உண்டு. உற்றார் - உறவினர்களிடம் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. கொடுக்கல் - வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் குறிப்பாக இந்தக் காலத்தில் கவனமாக இருந்து கொள்ளுங்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். உத்யோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்படுவார்கள். மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் நல்ல மதிப்பெண் கிடைக்கப்பெறும். மொத்தத்தில் பெரிய தீமைகளுக்கு இடம் இல்லை. அதே சமயத்தில் சுமாரான கால கட்டம் என்று இதனைச் சொல்லலாம்.

குரு பகவான் சஞ்சாரம் 15.5.2020 முதல் 12.9.2020 வரை :

பொருளாதார ரீதியாக சில தேக்க நிலைகளை நீங்கள் சந்திக்க இடம் உண்டு. காரணம் இந்தக் காலத்தில் குரு பகவான் வக்கிர கதியில் சஞ்சாரம் செய்கிறார். பேச்சில் கூட அதிக நிதானத்தை கடைபிடிக்கவும். உடல் ஆரோக்கியம் ஓரளவே சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஓரளவு சுபிட்சமான நிலை காணப்படும். வீடு, வாகனங்கள் ரீதியாக செலவுகள் அதிகரிக்க இடம் உண்டு. மற்றபடி, பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கப்பெறும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது கூட பிற்காலத்தில் நன்மை தரும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாட்டுத் தொடர்புகளால் நன்மைகள் ஏற்பட இடமுண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் இடமாற்றம் உண்டு. கொடுக்கல் - வாங்கல் போன்ற விவகாரங்களில் பெரிய தொகையை கடனாகக் கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் கடினமாக முயற்சி எடுத்துப் படிக்க வேண்டிய காலமாக இந்தக் காலம் உள்ளது. மொத்தத்தில் நன்மை - தீமை இரண்டுமே கலந்த காலம் என்பதால் இக்காலத்தில் மட்டும் எதிர்நீச்சல் போட்டு வெற்றி அடைய வேண்டி இருக்கும்.

குரு பகவான் சஞ்சாரம் 13.9.2020 முதல் 30.10.2020 வரை :

இந்தக் காலத்தில் குரு பகவான் உங்களுக்கு சாதகமாக சஞ்சாரம் செய்வதால் பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் கூட அனைத்தும் நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். அசையும், அசையா சொத்துக்களை வாங்கும் பாக்கியம் சிலருக்கு கிடைக்கப்பெறும். கணவன் - மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பேச்சில் மட்டும் அதிக நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய காலமாக இந்தக் காலம் காணப்படுகிறது. உற்றார் - உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலமாக நல்ல பலன்களை எல்லாம் நீங்கள் அடைவீர்கள். பயணங்களை திட்டமிட்டு செய்தீர்கள் என்றால் தேவை இல்லாத அலைச்சலை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு, சிறு பின்னடைவுகள் தோன்றினாலும் கூட பெரிய பாதிப்புகள் ஏற்படாது. பெரும்பாலும் மருத்துவ செலவுகள் குறைந்தே காணப்படும். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து நீங்கள் வெற்றி அடைவீர்கள். கொடுக்கல் - வாங்கலில் கூட பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். சிலர் கொடுத்த கடனை கொஞ்சம் போராடி வசூலிக்க வேண்டி வரலாம். உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் இடமாற்றம் கிடைத்தாலும் கூட சம்பள உயர்வு திருப்தி தராமல் இருக்கலாம். எனினும் வேலை பார்க்கும் இடத்தில் உங்களது மதிப்பு மரியாதை கூடும். மாணவர்களுக்கு கல்வியில் முயற்சிக்கு தக்க நல்ல பலன் கிடைக்கப்பெறும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப்பெறும். மொத்தத்தில் அனைத்து வகையிலும் சோதனைகளை எல்லாம் கடந்து இறுதியில் சாதனை படைக்கும் காலமாக இந்தக் காலம் இருக்கும்.

குரு பகவான் சஞ்சாரம் 31.10.2020 முதல் 20.11.2020 வரை :

அலைச்சல் இருந்தாலும் கூட இறுதியில் நினைத்த காரியங்களை எல்லாம் நீங்கள் நல்ல படியாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்து காணப்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகள் நன்மையை தரும். புத்திர வழியில் நல்ல செய்திகள் எல்லாம் தேடி வரும். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்களை வாங்கும் பாக்கியம் கிடைக்கப்பெறும். எனினும் தொடர்ந்து 12 ஆம் இடத்தில் சனி பகவான் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக ஏற்ற தாழ்வுகள் இருந்து வரும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாடு சம்பந்தமான வாய்ப்புகள் கூட தேடி வரும். உத்யோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்படுவார்கள். இதனால் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப்பெறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்கப்பெறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் முயற்சி செய்தால் நிச்சயம் கல்வியில் முன்னேற்றமான நிலையை அடைவார்கள்.

பரிகாரம்:

இந்தக் காலத்தில் ராகு/ கேது சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இல்லை என்பதால் ராகு காலத்தில் துர்க்கையை அரளி சாற்றி அதிகம் வழிபட்டு வாருங்கள். அதே போல, விநாயகருக்கு அருகம்புல்லை சாற்றி அதிகம் வழிபட்டு வாருங்கள். உடல் ஒத்துழைத்தால் சதுர்த்தி விரதம் கூட இருங்கள். இவை எல்லாம் உங்களது ராசிக்கு அதிக நன்மைகளை தரக்கூடியவை.

வணங்க வேண்டிய தெய்வம் : சிவ பெருமான்

ராசியான திசை : மேற்கு

ராசிக்கல் : கருநீலம்

ராசியான கிழமை : வெள்ளி மற்றும் சனி

ராசியான நிறம் : கருநீலம்

ராசியான எண்கள் : 5,6,8

Previous Post Next Post