-->

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - மகரம்


குரு பெயர்ச்சி மகர ராசி


எப்போது, எதை செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்து கொண்டு செயல்படும் மகர ராசி அன்பர்களே,

இது நாள் வரையில் குரு பகவான் உங்களது ராசிக்குப் 11 ஆம் இடத்தில் இருந்த படி பல நன்மைகளை செய்து இருக்கலாம். ஆனால், இனி வரும் காலங்களில் அதாவது வாக்கிய பஞ்சாங்கப்படி 28.10.2019ம் தேதியும் திருக்கணிதப்படி 5.11.2019 தேதியும் உங்களது ராசிக்கு 12 ஆம் இடத்தில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய இருக்கிறார். அதாவது விரயாதிபதி, விரயஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் இனி வரும் காலங்களில் வரவை விட செலவே அதிகம் முன்னிலை வகிக்கும். குறிப்பாக நீங்கள் இனி வரும் காலங்களுக்கு உங்களது பொருளாதார நிலையை மிகவும் உன்னிப்பாக கவனித்து நடுத்த வேண்டி இருக்கும். சிலர் தேவை இல்லாமல் கடனில் கூட சிக்கலாம். மொத்தத்தில் பணவரவு ஏற்ற - இறக்கமாக இருந்து வரும்.

குரு பெயர்ச்சி மகரம் 2019 பலன்கள்


கொடுத்த கடனை பார்த்துப் பொறுமையுடன் நிதானமாக அல்லது பக்குவமாகப் பேசி வசூல் செய்யவும்.எனினும் 23.9.2020 வரையில் ராகு / கேதுக்கள் ஓரளவு சாதகமாக இருப்பதால் பெரிய பிரச்சனைகளை சமாளித்து வெற்றியும் பெறுவீர்கள். அதன் பின் தான் நீங்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டிய கால கட்டமாக இருக்கிறது. எனினும் மேற்சொன்ன தேதி வரையில் எதிலும் நீங்கள் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் குறிப்பாக தங்களது பணியில் மட்டும் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். எனினும் குரு பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்தாலும் கூட அவரது பார்வை உங்களுக்கு சாதகமாக உள்ளது.

இதனால் ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சனைகள் வராமல் காக்கப்படுவீர்கள். எனினும் மருத்துவ செலவுகள் குறையுமே தவிர அது இருந்து கொண்டு தான் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்க நீங்கள் கடுமையாக முயற்சி செய்ய வேண்டி இருக்கும். உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு தவிர்க்க முடியாது தான். சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கூட தாமதம் ஆகலாம். பெரிய முதலீடுகளை செய்யும் சமயத்தில் கூட நிதானமாக இருந்து கொள்ளுங்கள். வர வேண்டிய பணம் தாமதம் ஆனாலும் கூட... தேவைகளை சமாளித்து இறுதியில் நடத்தி விடுவீர்கள். எந்த சூழ் நிலையிலும் மனம் மட்டும் தளர்ந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். அடுத்த குரு பெயர்ச்சி உங்களுக்கு ஏராளமான நன்மைகளை தரும். மொத்தத்தில் அனைத்து தரப்பினரும் நிதானத்தை கடைப்பிடித்து வெற்றி அடைய வேண்டிய காலமாக இந்தக் காலம் காணப்படுகிறது.

பெண்கள்:

பொருளாதார விவகாரங்களில் அவ்வப்போது நெருக்கடிகள் வந்து போகும். எனினும் சமாளித்து குடும்பத்தை கொண்டு செலுத்துவீர்கள். சிலருக்குப் புதிய கடன்கள் கூட உருவாக இடம் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். எனினும் பெரிய பாதிப்புகளுக்கு வாய்ப்பு குறைவு தான். இந்த சமயத்தில் குல தெய்வ பிரார்த்தனையை அதிகம் செய்யுங்கள். அவ்வாறு செய்வதால் அது உங்களுக்குப் பல வகையில் அருள் தரும். மற்றபடி, எதிலும் நிதானமாக இருந்து கொள்ளுங்கள். கணவர் மற்றும் குடும்பத்திடம் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். அலைச்சல் அதிகம் காணப்படும் என்பதால் எதையும் ஒரு முறைக்குப் பல முறை சென்று தான் முடிக்க வேண்டி இருக்கும். நவீன உபகரணங்கள் அல்லது சொத்துக்கள் சம்பந்தமாகவும் கூட விரய செலவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். இப்படியாக இந்தக் குரு பெயர்ச்சி சில சோதனைகளை தரக்கூடும். எனினும் அவற்றை இறுதியில் சமாளித்து நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

உடல் ஆரோக்கியம்:

உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. எந்த ஒரு விஷயத்தையும் ஈடுபாட்டுடன் செய்ய முயற்சி செய்யுங்கள். முடிந்த வரையில் என்ன தான் வேலை இருந்தாலும் கூட நேரத்திற்கு உண்டு, உறங்க முயற்சி செய்யுங்கள். கனவுகள் சிலருக்கு சஞ்சலம் தரலாம். அதனால், மனதை அலைபாய விடாதீர்கள். தெய்வ வழிபாட்டை அதிகம் செய்து வாருங்கள். பிரயாணங்களை அல்லது வேலைகளை திட்டமிடக் கற்றுக் கொள்ளுங்கள். இதனால் வீண் அலைச்சல் ஏற்படாமல் இருக்கும். இல்வாழ்வில் ஈடுபாடு குறையாமல் இருக்க மனதை எப்போதுமே நீங்கள் உற்சாகத்துடன் வைத்துக் கொள்ளுங்கள். எப்படிப் பார்த்தாலும் இந்த குருப் பெயர்ச்சி உங்களுக்கு சில பின்னடைவுகளை தந்தாலும் கூட இறுதியில் நீங்கள் அதை எல்லாம் சமாளித்து எதிர்நீச்சல் போட்டு முன்னேறிவிடுவீர்கள்.

குடும்பம் மற்றும் பொருளாதார நிலை:

பணவரவு சுமாராகத் தான் இருக்கும். எனினும் குடும்பத்தின் அடிப்படை தேவைகளை நீங்கள் நல்ல விதத்தில் பூர்த்தி செய்வீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். பொருளாதார ரீதியாக சில நெருக்கடிகள் ஏற்படவும் இடம் உண்டு. வீண் விரயங்கள் உண்டாகும் என்பதால் நன்கு நிதானித்து செலவு செய்யுங்கள். குடும்பத்தில் உள்ளவர்களை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் வராமல் பிரச்சனைகளை பேசித்தீர்க்கப்பாருங்கள். பிள்ளைகள் ரீதியாக சில மன சஞ்சலங்கள் ஏற்பட இடம் உண்டு. சொத்துக்கள் மற்றும் வாகனம் வாங்கும் விஷயத்தில் அதிக நிதானத்துடன் இருந்து கொள்ளுங்கள். சொத்துக்கள் வாங்கும் சமயத்தில் நிதானத்துடன் செயல்படுங்கள். தரகர்கள் பேச்சை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.

தொழில், வியாபாரம்:

கமிஷன், கான்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போருக்கு லாபம் குறையலாம்.கொடுத்த கடனை பக்குவமாகப் பேசி நிதானமாக வாங்கப் பாருங்கள். இதனால் தேவை இல்லாத பிரச்சனைகளில் இருந்து நீங்கள் தப்பலாம். மற்றபடி, தொழில் - வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறப்பாருங்கள். முடிந்தால் வாய்ப்புகளை கூட உருவாக்குங்கள் அதற்காக காத்திருக்காதீர்கள். பெரிய முதலீடுகளை நன்கு யோசித்து - திட்டமிட்டு செயல்படுங்கள். தொழில் ரீதியாக தேவை இல்லாத பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். இதனால் அலைச்சல் அதிகம் இருக்கலாம். திடீர் என்று வீட்டு உபயோகப் பொருள்கள் கூட பழுதாகி செலவுகளை வைத்து விடும்.

உத்தியோகஸ்தர்கள்:

பணி ரீதியாக வேலைப்பளு முன்பு இல்லாத அளவிற்கு அதிகரிக்க இடம் உண்டு. பிறர் செய்யும் தவறுகளுக்கு கூட நீங்களே பொறுப்பேற்க வேண்டி இருக்கும். சிலருக்கு அது சம்பந்தமான எதிர்பாராத இடமாற்றங்கள் கூட ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு அலைச்சல் இருக்கும். முடிந்த வரையில் கிடைக்கும் வேலையை இப்போதைக்கு செய்வது நல்லது. எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு வருவதற்குத் தாமதம் ஆகலாம். மொத்தத்தில் இது ஒரு சுமாரான காலம் தான்.

அரசியல்வாதிகள்:

எதிர்பார்க்கும் பதவிகள் கிடைக்க தாமதம் ஆகலாம். சமூகத்தில் உங்களது மதிப்பை தக்க வைத்துக் கொள்ள அதிகம் பாடுபட வேண்டி இருக்கும். சில சமயங்களில் கட்சிப் பணிக்காக கை காசை நீங்கள் செலவு செய்ய வேண்டி இருக்கும். பொருளாதார நிலை ஏற்ற - இறக்கமாக இருக்கும். பயணங்களை அதிகம் சிலர் செய்ய வேண்டி இருக்கும். மேடை பேச்சுக்களில் பேசும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் நீங்கள் பேசவும்.

விவசாயம் செய்பவர்கள்:

விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் எதிர்பார்த்த அளவில் லாபம் கிடைக்கத் தாமதம் ஆகலாம். பங்காளிகளை கூட அனுசரித்துச் செல்வது நல்லது. பூமி, மனை வாங்கும் சமயத்தில் நீங்கள் அதிகம் சிந்தித்து செயல்படுங்கள். கால் நடை வளர்ப்பவர்களுக்கு வீண் செலவு ஏற்பட இடம் உண்டு. மொத்தத்தில் சவால்களை கடந்து முன்னேறும் காலமாக இந்தக் காலம் இருக்கும்.

மாணவ - மாணவியர்:

கல்வியில் அதிக முயற்சி எடுத்து நீங்கள் படிக்க வேண்டி இருக்கும். தேவை இல்லாத நண்பர்களின் சகவாசத்தை நீங்கள் தவிர்க்கப்பாருங்கள். எனினும் சில மாணவர்கள் விளையாட்டுகளில் சாதனை படைக்க இடம் உண்டு. மற்றபடி அரசு வழியில் கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதம் ஆகலாம்.

குரு பகவான் சஞ்சாரம் 28.10.2019 முதல் 4.1.2020 வரை :

இந்தக் கால கட்டத்தில் வரவுக்கு மீறிய செலவு இருந்து வரும். எனினும் ராகுவின் சஞ்சாரம் உங்களுக்கு ஆறுதல் தரும் விதத்தில் உள்ளதால் பெரிய தீமைகள் ஏற்படாது. குறிப்பாக எதிர்ப்புகளை சமாளித்து நீங்கள் வெற்றி பெறுவீர்கள். கணவன் - மனைவி இடையே சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையலாம். எனினும் பெரிய உறவுச் சிக்கல்கள் ஏற்பட இடம் இல்லை. உற்றார் - உறவினர்களை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டிய காலமாக இந்தக் காலம் காணப்படுகிறது. பணவரவு மற்றும் ஏற்ற - இறக்கமாக காணப்படுகிறது. எனினும், குடும்பத்தேவைகளை நல்ல படியாகப் பூர்த்தி செய்வீர்கள். திருமணம் போன்ற சுப காரியங்களில் அலைச்சல் அதிகம் இருக்கும். எனினும் இறுதியில் நல்ல படியாக முடிந்தேறும். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்பட இடம் உண்டு. தொழில் அல்லது வியாபார ரீதியாக பெரிய முதலீடுகளை முடிந்த வரையில் தவிர்க்கப்பாருங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பயணங்களால் அலைச்சல் ஏற்பட இடம் உண்டு. சில சமயங்களில் மேல் அதிகாரிகளின் கடுபிடி அதிகரிக்கலாம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்திப் படிப்பது நல்லது. முடிந்த வரையில் தேவை இல்லாத நண்பர்களின் சகவாசங்களை தவிர்க்கப்பாருங்கள்.

குரு பகவான் சஞ்சாரம் 5.1.2020 முதல் 7.3.2020 வரை :

இந்தக் கால கட்டத்தில் எந்த ஒரு முயற்சியிலும் நீங்கள் எதிர் நீச்சல் போட்டு முன்னேறிவிடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பலவீனங்கள் படிப்படியாகக் குறையும். கணவன் - மனைவி ஒற்றுமை ஆறுதல் தரும். உற்றார் - உறவினர்களின் ஆதரவு ஓரளவு மகிழ்ச்சி தரும். பணவரவு சுமாராகத் தான் இருக்கும் எனினும் வீண் விரயங்களும் அவ்வப்போது இருந்து வரும். திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகள் சற்றே தாமதம் ஆகலாம். எனினும் சிலருக்கு அசையும் - அசையா சொத்துக்களை வாங்கும் பாக்கியம் ஏற்படும். இதனால் புதிய கடன்கள் உண்டாகும். கொடுக்கல் - வாங்கல் போன்ற விஷயங்களில் கவனமாக இருந்து கொள்ளுங்கள். சிலருக்குப் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கப்பெறலாம். தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளைக் கடந்து லாபம் பெறுவார்கள். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். மாணவர்களைப் பொறுத்தவரையில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் புரிந்து கொள்வார்கள். கொஞ்சம் பாடு பட்டு படித்தால் நல்ல மதிப்பெண்களை நிச்சயம் பெற்று விடுவீர்கள். சில மாணவர்கள் வருகிற ஆண்டில் வெளிநாடு சென்று கூட படிக்கலாம்.

குரு பகவான் சஞ்சாரம் 8.3.2020 முதல் 29.3.2020 வரை :

உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. எனினும் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. உற்றார் - உறவினர்களின் ஆதரவு அவ்வப்போது மகிழ்ச்சி தரும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் அலைச்சல் இருந்தாலும் கூட இறுதியில் குரு பலம் இல்லாவிட்டாலும் கூட சிலருக்கு குரு பார்வையால் திருமணம் நடந்தேறும். 6 ஆம் இடத்து ராகு அவ்வப்போது மன தைரியத்தை கொடுத்து உங்களை தேற்றுவார். முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டு தான் நீங்கள் முன்னேற வேண்டி இருக்கும். கொடுக்கல் - வாங்கல் போன்ற விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். மற்றபடி தொழில், வியாபாரம் செய்பவர்கள் அகலக்கால் வைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்பு ஒன்று தேடி வரும். இதனால் வேலை அதிகரித்து இருப்பதாக ஒரு சிந்தனை வரும். எனினும் சம்பள உயர்வு உடனடியாகக் கிடைக்க வாய்ப்பு குறைவு தான். வேலை தேடுபவர்கள் ஓராண்டுக்கு (அதாவது அடுத்த குரு பெயர்ச்சி வரையிலேயே) கிடைக்கும் வேலையை செய்வது நல்லது. மாணவர்களுக்கு முயற்சிக்குத் தக்க நல்ல பலன் கிடைக்காமல் போகாது. அதிலும் சிலருக்கு அரசு உதவிகள் கிடைக்கப்பெறும்.

குரு பகவான் சஞ்சாரம் 30.3.2020 முதல் 14.5.2020 வரை :

பணவரவு ஓரளவு தான் இருந்து வரும். எனினும் குடும்பத் தேவைகளை நல்ல படியாக நீங்கள் பூர்த்தி செய்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கும். மற்றபடி அன்றாடப் பணிகளில் சுறு சுறுப்புடன் செயல்படுவீர்கள். கணவன் - மனைவி இடையே சிறு, சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் கூட அது உடனே சரியாகி விடும். உற்றார் - உறவினர்களை அதிகம் அனுசரித்துச் செல்வது நல்லது. பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்க்கவும். சுப காரியப் பேச்சுவார்த்தைகளில் அதிக அலைச்சல் இருக்கும். எனினும் இறுதியில் அது நன்மையை தரும். கொடுக்கல் - வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் ராகுவின் சஞ்சாரத்தால் தொழில் போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். எனினும் தொழில் ரீதியாக மறைமுக எதிர்ப்புகளை தவிர்க்க முடியாது. தேவை இல்லாத பயணங்களை யூகித்துத் தவிர்க்கப்பாருங்கள். இதனால் அலைச்சல் மிச்சமாகும். மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை, ஞாபக மறதி போன்ற பிரச்சனைகள் ஏற்பட இடம் உண்டு. அதனால் கல்வியில் கூடுதல் கவனத்தை செலுத்துவது நல்லது. மொத்தத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் இது ஒரு சுமாரான காலமாகவே இருக்கும்.

குரு பகவான் சஞ்சாரம் 15.5.2020 முதல் 12.9.2020 வரை :

பணவரவு சுமாராகத் தான் இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தி ஆகும். கணவன் - மனைவி ஒற்றுமை கூட இந்தக் காலத்தில் சிறப்பாகவே இருக்கும். எனினும், உற்றார் - உறவினர்களை அதிகம் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் இந்தக் காலத்தில் குறிப்பாக கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. கொடுக்கல் - வாங்கல் ஓரளவு சரளமாக இருக்கும். உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் கூட அலுவலகத்திலும், சமூகத்திலும் நீங்கள் நன்கு மதிக்கப்படுவீர்கள். மாணவர்கள் பெரும்பாலும் கல்வியில் வெற்றி பெறுவார்கள். பெற்றோர் - ஆசிரியர்களின் பாராட்டுகள் கூட வந்து சேரும். எப்படிப் பார்த்தாலும் அனைத்துத் தரப்பினரும் இந்தக் காலத்தில் ஏதேனும் ஒரு வகையில் நன்மை அடைவார்கள்.

குரு பகவான் சஞ்சாரம் 13.9.2020 முதல் 30.10.2020 வரை :

இந்தக் காலத்தில் பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இல்லை என்ற காரணத்தால் பொருளாதார நிலையில் ஏற்ற - இறக்கமான சூழ்நிலையே காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை எடுத்துக் கொள்வது நல்லது. 23.09.2020 முதல் கேது உங்களுக்கு சாதகமாக 11 ஆம் இடத்தில் சஞ்சரிப்பதால் சிலருக்கு திடீர் தனவரவு ஏற்படும். வாழ்வில் ஒரு வித நம்பிக்கை ஏற்படும். இதனால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அனுகூலமான பலன் ஏற்படும். இன்னும் சிலர் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேற்றம் அடைவார்கள். எனினும் கணவன் - மனைவி இடையே மட்டும் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உற்றார் - உறவினர்களை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டிய காலமாக இந்தக் காலம் இருக்கும். கொடுக்கல் - வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளவும். மற்றபடி, புதிய ஒப்பந்தங்களில் ஈடுபடும் சமயத்தில் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். உத்யோகஸ்தர்களுக்கு தேவை இல்லாத திடீர் பயணங்கள் ஏற்பட இடம் உண்டு. மாணவர்கள் பொழுது போக்கை தவிர்த்து கல்விக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டி இருக்கும். நல்ல மதிப்பெண்ணை பெற அதிக முயற்சிகளை எடுக்க வேண்டி இருக்கும்.

குரு பகவான் சஞ்சாரம் 31.10.2020 முதல் 20.11.2020 வரை :

உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சோர்வு ஏற்பட இடம் உண்டு. முடிந்த வரையில் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது உங்களுக்கு நன்மை அளிக்கும். கணவன் - மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய தருணம் இது. எனினும் கேது லாபஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் ஒரு சில நல்ல பலன்கள் ஏற்பட இடம் உண்டு. பணவரவு கூட அவ்வப்போது உங்களது தேவைகளை நிறைவேற்றும் படியாகத் தான் இருக்கும். எனினும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளாவிட்டால் புதிய கடன்களில் சிக்க நேரிடலாம். மறுபுறம், தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும். எனினும், வேலையாட்களால் சிலர் பிரச்சனைகளை சந்திக்க இடம் உண்டு. கொடுக்கல் - வாங்கல் சுமாராகத் தான் இருந்து வரும். எனினும் கொடுத்த கடன் திரும்பி வர தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மற்றபடி எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்படலாம். மாணவர்கள் முயற்சி செய்தால் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெற இயலும்.

பரிகாரம்:

வாய்ப்பு கிடைத்தால் அவசியம் திருப்பதி சென்று திருமாலை வணங்கி வாருங்கள். கோயில் தீபங்களுக்கு உங்களால் இயன்ற அளவில் நல்லெண்ணெய் வாங்கிக் கொடுங்கள். முடிந்தால் ஏழை மாற்றுத் திறனாளிகளுக்கு சைவ உணவு வாங்கித் தாருங்கள். இதனையும் கூட ஒரு சனிக் கிழமையில் செய்வது உத்தமம்.


வணங்க வேண்டிய தெய்வம் : சிவ பெருமான்

ராசியான திசை : மேற்கு

ராசிக்கல் : நீலக்கல்

ராசியான கிழமை : வெள்ளி, சனி

ராசியான நிறம் : வெள்ளை மற்றும் நீலம்

ராசியான எண்கள் : 5, 6, 8

Previous Post Next Post